சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 03) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:பக்கத்து வீட்டுக்காரர் கைது
சென்னை, போரூர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம், வீட்டின் மொட்டை மாடியில் சிறுமி, நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த, பக்கத்து வீட்டில் வசிக்கும் வீரமணி, 52, என்பவர், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அச்சிறுமி சத்தமிட்டு அங்கிருந்து ஓடி, நடந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.பெற்றோரின் புகாரின்படி வளசரவாக்கம் மகளிர் போலீசார் விசாரித்ததில், சிறுமியிடம் வீரமணி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து வீரமணியை, 'போக்சோ' சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்தனர். போக்சோவில் வாலிபர் கைது
ஊட்டி காந்தள் பகுதியை சேர்ந்த, 23 வயது வாலிபர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் திருமணமாகி குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் தனியாக சென்று விட்டார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த, 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபரும், சிறுமியும் முத்தோரை பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் கடந்த ஜன., மாதம் திருமணம் செய்து கொண்டனர். பின், இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்று விட்டதால் இந்த திருமணம் குறித்து இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவில்லை.அந்த சிறுமி திருமணமான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தார். இதை பார்த்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஊட்டி ஊரக மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அந்த வாலிபரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.