உப்பூர், எண்ணுார் மின்திட்டம் ஆலோசனை கேட்கிறது வாரியம்
சென்னை:முடங்கியுள்ள உப்பூர், எண்ணுார் அனல் மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை, பொது - தனியார் கூட்டு முயற்சியில் எப்படி செயல்படுத்துவது என, தமிழக உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்திடம், மின் வாரியம் ஆலோசனை கேட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் எண்ணுாரில், 660 மெகாவாட் திறனில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி, 2014 பிப்ரவரியில் துவக்கப்பட்டது. இதன் கட்டுமானப் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதால், வேறு நிறுவனத்திடம், 2022 மார்ச்சில் வழங்கப்பட்டது. அந்நிறுவனமும் தாமதம் செய்ததால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் தலா, 800 மெகாவாட் திறனில் இரு அலகுகள் உடைய அனல்மின் நிலையம் அமைக்கும் பணி, 2016ல் துவங்கியது. இதை எதிர்த்து சிலர் தொடர்ந்த வழக்கில், பசுமை தீர்ப்பாயம், 2021ல் பணிகளை தொடர தடை விதித்தது. இதனால், 35 சதவீத பணிகளுடன் திட்டம் முடங்கியது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:முடங்கியுள்ள இரு அனல்மின் திட்டங்களும், பொது - தனியார் கூட்டு முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த முயற்சியில், மின்வாரியம் முதல் முறையாக ஈடுபட உள்ளது. பொது - தனியார் கூட்டு முறையில் எப்படி செயல்படுத்தலாம் என்பது குறித்து, தமிழக உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.