உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீயசக்திகளை அழிக்க போர் வேண்டும்

தீயசக்திகளை அழிக்க போர் வேண்டும்

சென்னை,: ''போர் நடத்தி தான் அமைதியை நிலைநாட்ட முடியும்,'' என, கர்நாடகாவில் உள்ள, ஸ்ரீயோகானந்தேஸ்வர சரஸ்வதி மடத்தின் ஸ்ரீசங்கர பாரதி மகாசுவாமிகள் தெரிவித்தார்.ஸ்ரீசிருங்கேரி பாரதி வித்யாஷ்ரம் சார்பில், சென்னை தி.நகரில் நேற்று நடந்த, 'இந்தியாவின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான சொற்பொழிவு' நிகழ்வில், ஸ்ரீசங்கர பாரதி மகாசுவாமிகள் பேசியதாவது:போர் வாயிலாக தான் அமைதியை நிலைநாட்ட முடியும். எங்கு தீய சக்திகள் இருக்கின்றனவோ, அங்கு அமைதி இருக்காது. தீய சக்திகளை அழிக்காமல் நல்லது நடக்காது. எனவே, தீய சக்திகளை அழிக்க போர் நடத்தியே ஆக வேண்டும். அதையே ராமாயணம், மகாபாரதம் நமக்கு உணர்த்துகின்றன. பல போர்கள் நடத்தப்பட்டே தர்மம் நிலைநாட்டப்பட்டுள்ளது.நம் உள் மனதுக்குள் இருக்கும் வெறுப்புணர்வு தான் அமைதியை சீர்குலைக்கிறது. எனவே, நாம் யார் மீதும் வெறுப்புணர்வு கொள்ளக்கூடாது. அதைத்தான் அமைதியின் திருவுருவான ஆதிசங்கரர் வலியுறுத்தி இருக்கிறார். அவர் காட்டிய அத்வைத பாதையில் நாம் பயணித்து, அன்பே உருவாக வாழ வேண்டும். அத்வைத பாதையில் சென்றால், நமக்கு மன வலிமை கிடைக்கும்; வெறுப்புணர்வும் இருக்காது.இவ்வாறு மகாசுவாமிகள் பேசினார்.

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசியதாவது:

இந்தியாவில் தோன்றிய அனைத்து தர்மங்களும் அமைதியை தான் வலியுறுத்துகின்றன. அமைதி இல்லாவிட்டால், நல்வாழ்வு இல்லை என்று போதித்த மண் இது. அதே நேரத்தில், அமைதியை நிலைநாட்ட வீரமும் முக்கியம். அதையும், நம் தர்மம் தான் சொல்கிறது.இந்நிகழ்வை சிருங்கேரி மடம் நடத்துகிறது. சிருங்கேரி மடத்தின் மடாதிபதியாக இருந்த வித்தியாரண்யர், விஜயநகர பேரரசு உருவாக காரணமாக இருந்தார். விஜயநகர பேரரசின் வீரதீர வழிபாடுகளால் தான் தென் மாநிலங்களில், இன்றும் கோவில்கள் நிலைத்து நிற்கின்றன. 'பெற்ற தாயும் பிறந்த நாடும் முக்கியம்' என்றார் பாரதியார். தேசம் இல்லாமல் எதுவும் இல்லை என்பதை உணர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகமான பி.ஐ.பி., முன்னாள் இயக்குனர் மாரியப்பன் பேசியதாவது:நாம் அமைதியை விரும்பினாலும், நம் அண்டை நாடுகள் பயங்கரவாதிகளை ஏவி விட்டு, பயங்கரவாத தாக்குதலை நடத்துகின்றன. இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரும் வரை, இந்தியாவில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட முடியாது.பயங்கரவாதிகளுக்கு நம் நாட்டுக்கு உள்ளே இருந்து ஆதரவு கிடைக்கிறது. அதனால், உள்நாட்டிலும் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கும் முடிவு கட்ட வேண்டும். அமைதி இருந்தால் தான் வளர்ச்சி இருக்கும். இதை உணர்ந்து, பயங்கரவாதத்தை அனைவரும் எதிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினர்.சிருங்கேரி வித்யாதீர்த்த பவுண்டேஷன் தலைவர் கிருஷ்ணன், சம்ஸ்கிருத கல்லுாரி பேராசிரியர் மணி திராவிட சாஸ்திரிகள், பிரபல நடன கலைஞர் அம்பிகா காமேஷ்வர், மூத்த வழக்கறிஞர் ஹரிசங்கர், பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி முதல்வர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sundar R
மே 23, 2025 12:52

ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடித்து, அம்மனிதர் கால் உடைந்தால், அது அடித்தவன் பேரில் தவறு. ஆனால், குற்றம் செய்த ஒரு மனிதனின் தலையை அரசன் சீவினால் கூட அது அந்த அரசன் மீது குற்றம் ஆகாது. அரசன் தர்மத்தை நிலைநாட்டியுள்ளார் என்று தான் அச்செயலைப் பற்றி மக்கள் கூறுவார்கள். தமிழகத்தில் தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும். இச்செய்தியில் வித்யாதீர்த்தர் ஃபவுண்டேஷன் தலைவர் மதிப்புமிக்க, போற்றுதலுக்குரிய திரு. கிருஷ்ணன் அவர்கள் எனக்குத் தெரிந்து 40 ஆண்டுகளாக ஸ்ருங்கேரி சாரதா பீடம் மஹா சந்நிதானம் அவர்களின் ஆசியோடு பள்ளிக் குழந்தைகளுக்கு ஆன்மீகம் பயிற்றுவித்து, அவர்களுக்கு போட்டிகளை பெரிய அளவில் அடிக்கடி நடத்தி ஏராளமான பரிசுகளை அவர் தனது சொந்த செலவில் செய்து வருகிறார். திரு. கிருஷ்ணன் அவர்களை நான் சிருங்கேரியிலும், சென்னையிலும் சந்தித்திருக்கிறேன். எப்போதுமே அவர் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவருக்கு என் பணிவான நமஸ்காரங்கள்.


மூர்க்கன்
மே 23, 2025 10:47

வாண்டடா வந்து வண்டியிலேறும் கூவை குஞ்சுகளின் உளறல். அஹிம்சையால் ஏகாதிபத்தியத்தையே விரட்டியது இந்த மண் . போர் ஒன்றும் விளையாட்டல்ல ?? கடும் பொருட்சேதத்தையும் உயிர் சேதத்தையும் ஒரு சேர கொண்டு வரக்கூடியது. முகுந்த் நரவனே அவர்கள் கூற்றின்படி அமைதிக்கான வழி கிடைக்கும் போது சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் இல்லையெனில் நிரந்தர ஊனமாவது ஏதோ ஒரு சிலர் மட்டுமல்ல இந்தியாவின் வளர்ந்து வரம் பொருளாதாரமும்தான். சவலை ...களை விரட்டியடித்தால் பாரதம் வளம் பெரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை