உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சல்மான் ருஷ்டியை தாக்கியவர் பயங்கரவாத குற்றவாளியாக அறிவிப்பு

சல்மான் ருஷ்டியை தாக்கியவர் பயங்கரவாத குற்றவாளியாக அறிவிப்பு

நியூயார்க்: நம் நாட்டில் பிறந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை, 79, கத்தியால் குத்திய ஹாதி மதார், 28, பயங்கரவாத குற்றவாளி என, அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்தவர் சல்மான் ருஷ்டி. ஐரோப்பிய நாடான பிரிட்டன் மற்றும் அமெரிக்க குடியுரிமைகளை பெற்றுள்ளார். சிறந்த நாவலாசிரியரான இவர், எழுத்தாளர்களுக்கான உயரிய விருதான புக்கர் பரிசைப் பெற்றுள்ளார். கடந்த 1989ம் ஆண்டு சல்மான் ருஷ்டி எழுதிய ‘தி சட்டானிக் வர்சஸ்’ என்ற நாவல் முஸ்லிம் மதத்திற்கு எதிராக இருப்பதாக சர்ச்சை எழுந்தது. மேற்காசிய நாடான ஈரானின் அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா ரூஹொல்லா கொமேனி, சல்மான் ருஷ்டியை கொல்வதற்காக, மத மரண தண்டனையை அறிவித்தார். இதனால் நீண்ட காலம் தலைமறைவாக இருந்தார் சல்மான் ருஷ்டி. கடந்த, 2022 ஆக., 12ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் இருந்த ஹாதி மதார் என்ற இளைஞர் திடீரென மேடையேறி, ருஷ்டியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில், சல்மான ருஷ்டி, வலது கண் பார்வையை இழந்தார். இதைத் தவிர, பல நரம்பு பிரச்னைகளும் ஏற்பட்டன. இது தொடர்பான வழக்கில், அமெரிக்க மற்றும் லெபனான் குடியுரிமை பெற்றுள்ள மதாருக்கு, 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக மதார் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நியூயார்க் மாவட்ட நீதிமன்றம், பயங்கரவாத குற்றவாளியாக அவரை நேற்று அறிவித்தது. வரும், நவ., 3ல் தண்டனை குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ