பூடான் மன்னருடன் அற்புதமான சந்திப்பு: காலசக்கர அபிஷேக விழாவில் பங்கேற்ற மோடி பெருமிதம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
திம்பு: பூடான் தலைநகர் திம்புவில், பூடான் மன்னர் ஜிக்மே நாம்கியேல் வாங்சுக்குடன், பேச்சு நடத்திய பிரதமர் மோடி, காலசக்கர அபிஷேக நிகழ்வில் பங்கேற்றார்.இரண்டு நாள் பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி திம்புவில் உள்ள காலசக்கர அபிஷேகம் நிகழ்வில் அந்நாட்டு மன்னருடன் இணைந்து பங்கேற்றார். விழாவின் ஒரு பகுதியாக மன்னர் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''பூடான் மன்னருடன் காலசக்கர அபிஷேகம் நிகழ்வில் பங்கேற்கும் பெருமையைப் பெற்றேன். உலகெங்கிலும் உள்ள பவுத்தர்களுக்கு இது ஒரு முக்கியமான சடங்கு, இது மிகவும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்தது'' என குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக, பூடான் மன்னர் ஜிக்மே நாம்கியேல் வாங்சுக்குடன், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அவர், இந்த பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக அமைந்தது என்று தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி கூறியதாவது: பூடான் மன்னர் ஜிக்மே நாம்கியேல் வாங்சுக்குடன் ஒரு அற்புதமான சந்திப்பு நடைபெற்றது. இந்தியா-பூடான் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தோம்.எரிசக்தி, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். இரண்டு நாட்கள் பூடான் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு பிரதமர் மோடி திம்புவிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார். பூடான் மன்னர் ஜிக்மே நாம்கியேல் வாங்சுக் மற்றும் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோர் அவரை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.