ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பல நாடுகளை தாக்கியது சுனாமி
மாஸ்கோ:ரஷ்யாவின் கிழக்கு பிராந்தியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று 8.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ரஷ்யாவை தவிர, ஜப்பான், அமெரிக்கா, கனடாவை சுனாமி அலைகள் தாக்கின. ரஷ்யாவின் கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் நேற்று அதிகாலையில், 8.8 ரிக்டர் அளவில், 20 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 2011ல் ஜப்பானை நிலைகுலையச் செய்த 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு பின், உலகளவில் ஏற்படும் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாகும். இந்த நிலநடுக்கத்தால் கம்சட்கா கடற்கரை பகுதிகளை 100 அடி உயர அபாயகரமான சுனாமி அலைகள் தாக்கின. இதனால், கடல் நீர் நிலப்பகுதிக்குள் வெள்ளம் போல் பாய்ந்தது. சுனாமி தாக்கிய ரஷ்ய பகுதிகள் மக்கள் அடர்த்தி இல்லாத இடங்கள் என்பதால், உயிரிழப்புகள் பெரியளவில் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ விபரங்களை இன்னமும் ரஷ்ய அரசு வெளியிடவில்லை. பலர் காயமடைந்துள்ளதாக மட்டும் கூறியுள்ளது.நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து 120 கி.மீ., தொலைவில் பெட்ரோபாவ்லோவ்ஸ்க் - -கம்சட்ஸ்கி நகரம் உள்ளது.இதுவே அந்த பிராந்தியத்தின் அதிக மக்கள் வசிக்கும் இடம். இங்கு 1.8 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நிலநடுக்கத்தால் ஏரளமான வீடுகள், கடைகள் சேதமடைந்தன. உயிரிழப்புகள் குறைவு என அரசு தெரிவித்துள்ளது.நிலநடுக்கம் ஏற்பட்ட ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்திற்கு தெற்கே 1,600 கி.மீ., தொலைவில் கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் உள்ளது. கிழக்கில் அமெரிக்கா மற்றும் கனடா உள்ளன. ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இந்த நாடுகளின் கடற்கரை நகரங்களை சுனாமி அலைகள் தாக்கின.ஜப்பான்: ரஷ்யாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களுக்கு பின் ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள ஹொக்கைடோ, குஜி துறைமுகம், இவாட்டே, மாட்சுஷிமாவில் நில அதிர்வு உணரப்பட்டது. கடற்கரைகளில் 3 அடி உயர சுனாமி அலைகள் ஏற்பட்டன.முன்னெச்சரிக்கையாக கரையோரங்களைச் சேர்ந்த, எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு இடம்பெயர்ந்தனர். அணுசக்தி நிலையங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நீர்வழி போக்குவரத்து தடைபட்டது.ஒருவர் உயிரிழந்ததாக ஜப்பான் கூறியுள்ளது. சுனாமி எச்சரிக்கையை ஜப்பான் மாலையில் திரும்பப் பெற்றது. இருப்பினும் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என, எச்சரித்துள்ளது.ஹவாய்: அமெரிக்காவின் ஹவாய் தீவில் கடல் சில இடங்களில்உட்புகுந்தது. இதனால் சுற்றுலா பயணியர் மற்றும் பொது மக்கள் ஒரே சமயத்தில் கரையை விட்டு நிலப்பகுதிக்கு புறப்பட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மீட்பு பணிகளுக்காக ஹெலிகாப்டர்கள், உயரமான வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.அலாஸ்கா: அலாஸ்காவின் அலுாஷியன் தீவுகள், ஒரேகான் கடற்கரையில் சுனாமி அலைகள் காரணமாக கடல் நீர் சில நுாறு அடிகள் உட்புகுந்தது. ஆபத்தான நீரோட்டம் காணப்பட்டது.இவை தவிர ரஷ்யாவுக்கு தெற்கில் உள்ள பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, நியூசிலாந்து, பிஜி, சாலமன் தீவுகள் ஆகிய நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அசாதாரண அளவில் அலைகள் எழுந்தன.