அமெரிக்கா மசூதியில் துப்பாக்கி சூடு மூவர் பலி; இருவர் தற்கொலை
சான்டியாகோ: அமெரிக்காவின் சான்டியாகோவில் உள்ள மசூதி ஒன்றில் இரண்டு இளைஞர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 ஆண்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களும் தற்கொலை செய்து கொண்டனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோ நகரில் உள்ள மிகப்பெரிய மசூதிக்குள் நேற்று நுழைந்த இரண்டு இளைஞர்கள் கண்மூடித்தனமாக சுட்டனர். இச்சம்பவத்தில் 3 ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதலை நடத்திவிட்டு தப்பியோடிய அந்த இரு இளைஞர்களும் சில தெருக்கள் தள்ளி, தாங்கள் வந்த வாகனத்துக்குள்ளேயே தங்களைத் தாங்களே சுட்டு தற்கொலை செய்து கொண்டனர். மசூதியில் துப்பாக்கி சூடு நடந்தபோது, அங்கிருந்த பாதுகாவலர் மிக தைரியமாக செயல்பட்டு, தாக்குதல் நடத்தியவர்களை எதிர்த்து போராடினார். பல உயிர்களை காப்பாற்றிய அவர் இத்தாக்குதலில் உயிரிழந்தார். மத வெறுப்புணர்வே இந்த தாக்குதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.