ஹவுதி பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்; ரகசியங்களை வெளியிட்டது அமெரிக்க பத்திரிகை
வாஷிங்டன்: ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் தொடர்பாக உருவாக்கப்பட்ட சமூக வலைதளக் குழுவில் தவறுதலாக பத்திரிகையாளர் ஒருவர் சேர்க்கப்பட்டார். அந்த ரகசிய தகவல்களை, அவர் சார்ந்த அமெரிக்க பத்திரிகை வெளியிட்டுள்ளது.மேற்காசிய நாடான ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி அமைப்பு மீது கடந்த 15ம் தேதி அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், 53 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர்.முன்னதாக இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அரசு திட்டத்தை வகுத்திருந்தது. இதற்காக, 'சிக்னல்' என்ற சமூக வலைதளத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான குழு அமைக்கப்பட்டது. இதில், துணை அதிபர் வான்ஸ், பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள், ராணுவ உயரதிகாரிகள் என, 19 பேர் இடம்பெற்றிருந்தனர்.இந்தக் குழுவில், அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'த அட்லாண்டிக்' என்ற இதழின் தலைமை செய்தி ஆசிரியர் ஜெப்ரி கோல்ட்பெர்க் தவறுதலாக சேர்க்கப்பட்டார். தாக்குதல் தொடர்பாக இந்தக் குழுவில் பரிமாறிக் கொள்ளப்பட்ட தகவல்களை வெளியிடப் போவதாக அவர் கூறியிருந்தார்.ஆனால், இந்த குழப்பம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், இந்த தகவல் பரிமாற்றங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும், த அட்லாண்டிக் இதழில், ஜெப்ரி கோல்ட்பெர்க் வெளியிட்டுள்ளார்.எவ்வாறு தாக்குதல் திட்டமிடப்பட்டது, ஒவ்வொரு ஏவுகணையும் வீசப்பட்டபோது நடந்த தகவல் பரிமாற்றம் என, அனைத்து தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமெரிக்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.