உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கூட்டணி பேச்சில் உடன்பாடு இல்லை: பாக்.,கில் ஆட்சி அமைப்பதில் இழுபறி

கூட்டணி பேச்சில் உடன்பாடு இல்லை: பாக்.,கில் ஆட்சி அமைப்பதில் இழுபறி

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையேயான கூட்டணி பேச்சில் உரிய முடிவு எட்டப்படாததால், தேர்தல் முடிந்து 10 நாட்களுக்கு மேலாகியும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. பாகிஸ்தானில் கடந்த 8ம் தேதி பொது தேர்தல் நடந்தது. வன்முறை, இணையதள முடக்கம், ஓட்டுப்பதிவில் முறைகேடு என பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவே நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அன்றைய தினமே எண்ணப்பட்டன.மொத்தம் 265 தொகுதி களுக்கு நடந்த ஓட்டுப்பதிவில், சுயேச்சைகளாக போட்டியிட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 93 இடங்களை கைப்பற்றினர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களை பிடித்தது. 54 இடங்களில் பிலாவல் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றி பெற்றது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பாக்., மக்கள் கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைக்க முடிவு செய்தன. இதற்கான பேச்சு கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதுவரை இரு தரப்பினரும், மூன்று முறை சந்தித்து பேச்சு நடத்தியபோதும், உரிய முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், இன்று மீண்டும் பேச்சு நடத்த இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்த பாக்., மக்கள் கட்சி, சபாநாயகர் மற்றும் செனட் தலைவர் பதவி கோரி வருகிறது.அதே சமயம், தாங்கள் ஆளும் மாகாணங்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருவதால், பேச்சில் முடிவு எட்டப்படாமல் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக இரு கட்சிகளும் வெளியிட்டு உள்ள கூட்டறிக்கையில், 'இரு தரப்பிலும் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் முழுமையாக விவாதிக்கப்பட்டன. 'இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், மேலும் சில விஷயங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்க ஆலோசனை நடத்த வேண்டி உள்ளது. 'இன்றைய கூட்டத்தில் உரிய முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது' என தெரிவித்துள்ளன.

இம்ரான் ஆதரவாளர்கள் கைது

தேர்தலில் பல்வேறு இடங்களில் முறைகேடு நடந்ததை கண்டித்து, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். லாகூரில் கட்சி அலுவலக வாசலில் திரண்ட ஆதரவாளர்கள், முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முடிவில், ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்குவா உள்ளிட்ட மாகாணங்களிலும் போராட்டம் வெடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ