உள்ளூர் செய்திகள்

சொல்ல சொல்ல இனிக்குதடா - நொய்டா முருகன் கோவிலில் வைகாசி விசாகம்

'வைகாசி விசாகம்' நொய்டா செக்டர் 62 முருகன் கோவிலில் இரண்டு நாட்கள் நிகழ்வாக கொண்டாடப்பட்டது. வேத மந்திரத்துடன் தொடங்கி, ருத்ர ஜப ஹோமம், தொடர்ந்து ஏகாதச ருத்ராபிஷேகம் முதல் நாளில் நடந்தது. இதைத் தொடர்ந்து மகா தீபாராதனை மற்றும் மகா பிரசாதம் அனைத்து பக்தர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. அதே நாளில் மாலை, திருப்புகழ் இசை அன்பர்களால் திருப்புகழ் பாடப்பட்டது. ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற ஸ்ரீ சுப்பிரமணியர் லக்ஷார்ச்சனை இவ்விழாவின் சிறப்பு அம்சமாகும். வைகாசி விசாகம் தினத்தன்று, பக்தர்கள் கோவில் வளாகத்திற்குள் காவடி / பால்குடம் ஊர்வலமாக எடுத்து எடுத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், ஸ்ரீ கார்த்திகேயனுக்கு நிகழ்த்தப்பட்டது. மேலும், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 'வெற்றி வேல் முருகனுக்கு ஹரோ ஹரா' என்று கோஷமிடுவது அல்லாமல் பக்தர்கள் முருகனைப் பற்றிய பல்வேறு பக்தி பாடல்களையும் பாடினார்கள். கந்தர் சஷ்டி கவசம் மற்றும் ஸ்ரீ கந்தர் அனுபூதி ஆகிய ஸ்லோகங்களும் வாசித்தனர். காவடியுடன் பக்தர்கள் நடனமாடினர். அனைத்து பூஜைகளும், அபிஷேகங்களும் தென்னிந்தியா முழுவதும் ஆறுபடை முருகன் கோயில்களிலும் செய்யப்பட்ட அதே பாணியில் நிகழ்த்தப்பட்டன. சங்கர், ஸ்ரீராம் வாத்தியார்கள் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ், கோவில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ரா உதவியுடன் நடத்தப்பட்டன . கோவில் நிர்வாகம், நன்கொடையாளர்கள், ஸ்பான்சர்கள் தவிர, ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் மண்டலி, குழு உறுப்பினர்கள்: ரவி சர்மா, பாலாஜி, ராமசேஷன், ராஜு ஐயர், ராஜேந்திரன், கோபால், அர்ஜுன், பழனிவேல், மற்றும் பராமரிப்பு பணியாளர்கள் அவர்களின் சிறப்பான சேவையினால் இந்த ஆண்டின் வைகாசி விழா நன்றாகவே நடந்தது, என தெரிவித்துக் கொண்டது. கோவில் நிர்வாகம் ஸ்ரீ மகா பெரியவா ஜெயந்தியை முன்னிட்டு அவஹந்தி ஹோமம் மற்றும் உபநிஷத் பாராயணம் ஏற்பாடு செய்திருந்தனர் . 'அனுஷ' நக்ஷத்திரத்தை முன்னிட்டு மாதாந்திர பூஜையும் நடந்தது. மாலையில் ஹனுமான் சாலிசா பக்தர்கள் பாராயணம் செய்தார். மேலும் ஸ்ரீ மகா பெரியவா பாதுகா பூஜையும் நடந்தது. - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !