ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் நவராத்திரி மஹோத்ஸவம்
நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது. புதுடில்லி ஆர்.கே.புரம், செக்டார் 1-ல் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில், நவராத்திரி மஹோத்ஸவத்தின் முதல் நாளில் ஸ்ரீ மகாபலேஷ்வர் பட், ஸ்ரீ அனந்த பத்மநாபன் ஆகியோர் தலைமையில் காலை கலச ஸ்தாபனம், கணபதி பூஜை, அபிஷேகம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி நடைபெற்றது. பூஜைக்கு பிறகு, தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நவராத்திரி மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர். நவராத்திரியின் முதல் நாளில் கொலு வைத்து, துர்கை அம்மனுக்கும் அலங்காரம் செய்து பூஜைகளும், மந்திரங்களாலும் வணங்கப்படுகிறது. -- புதுடில்லியில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் எம்.வி. தியாகராஜன்.