உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் /  மாணவியருக்கு உதவும் சுச்சி திட்டம்

 மாணவியருக்கு உதவும் சுச்சி திட்டம்

-நமது நிருபர் -: க ர்நாடகாவில் பெண்களின் கல்வி, சுகாதார மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், 'சுச்சி' திட்டமும் அடங்கும். இத்திட்டம் அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவியருக்கு வரப்பிரசாதமாக உள்ளது.இத்திட்டத்தின் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், பி.யு., கல்லுாரிகளில் படிக்கும் மாணவியருக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும். 10 முதல் 19 வயதுள்ள மாணவியர் திட்டத்தின் பயனாளர்கள். ஒரு மாணவிக்கு ஓர் ஆண்டிற்கு தேவையான, 120 நாப்கின்கள் வரை வழங்கப்படும். இத்திட்டம், கர்நாடகாவில் 2013 - 2014ம் நிதியாண்டில், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதற்கு மாணவியர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, கிராமங்களில் உள்ள அரசு பள்ளி மாணவியருக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. ஏனெனில், கிராமங்களில் உள்ள மாணவியர் மாதவிடாய் நாட்களில் போதிய துணி அல்லது நாப்கின் வசதி இல்லாததால், மாதத்திற்கு 3 நாட்கள் பள்ளிக்கு விடுப்பு எடுப்பது வழக்கமாக இருந்தது. இது, அவர்களின் கல்வியைப் பாதித்து, நாளடைவில் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தும் அவலத்திற்கும் வழிவகுத்தது. ஆனால், 'சுச்சி' திட்டம் அமலுக்கு வந்த பிறகு, மாணவியருக்கு பள்ளியிலேயே நாப்கின்கள் கிடைப்பதால், பயமும் தயக்கமும் நீங்கி, மாதவிடாய் நாட்களிலும் மாணவியர் உற்சாகமாக பள்ளிக்கு வரத் தொடங்கினர். நாப்கின்களை மாணவியர் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆசிரியைகள் வகுப்பு எடுக்கின்றனர். இத்திட்டத்தால், மாணவியரின் உடல் நலம் பாது காக்கப்படுகிறது. இப்படி பலரும் வரவேற்ற திட்டம், கொரோனா காலத்தில் நிதி பற்றாக்குறையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின், மாணவியரின் நலன் கருதி, 2024ம் ஆண்டில் மீண்டும் துவங்கியது. நாப்கின்கள் வழங்குவதோடு மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் கருதி, மாதவிடாய் கோப்பைகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக, ஆண்டுதோறும், 70 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்படுகிறது. 19.64 லட்சம் மாணவியர் பயன்பெறுகின்றனர். இது போன்ற திட்டங்களே, மாணவியரின் நலனுக்கு உறுதுணையாக இருக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை