உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் /  பாம்புகளின் பாதுகாவலர் லிசா

 பாம்புகளின் பாதுகாவலர் லிசா

- நமது நிருபர் - பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது பாம்பின் விஷத்தன்மை மற்றும் ஆபத்தை கண்டு அஞ்சுவதை குறிக்கும் பழமொழியாக உள்ளது. இருந்தாலும் பாம்பை தங்கள் நண்பர்கள் போல பாவித்து லாவகமாக பிடிக்கும் ஏராளமான பாம்புபிடி வீரர்களும் உள்ளனர். வீட்டிற்குள் பாம்பு நுழைந்து விட்டால் அதை அடித்து கொல்ல வேண்டும் என்பதே நம் எண்ணமாக இருக்கும். ஆனால் ,பாம்புகளின் பாதுகாவலர்களாக ஏராளமானோர் உள்ளனர். இவர்களில் ஒருவர் மைசூரின் இளம்பெண், லிசா கோன்சால்வ்ஸ். இவர் தன் வீட்டிலேயே பாம்பு வளர்க்கிறார். லிசா கூறியதாவது: சிறுவயதில் இருந்தே ஊர்ந்து செல்லும் பிராணிகள் மீது எனக்கு தனி அன்பு உண்டு. விலங்குகளை அதிகம் நேசிக்கிறேன். கடந்த 2018ல் மைசூரில் உள்ள தி லியானா டிரஸ்டில் ஊர்ந்து செல்லும் பிராணிகள் பராமரிப்பாளராக வேலைக்கு சேர்ந்தேன். அங்கு நிறைய பாம்புகள் பராமரிக்கப்பட்டு வந்தன. பாம்பு மிக ஆபத்தானது என்பது மக்கள் எண்ணமாக உள்ளது. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. பாம்புக்கு நாம் தொந்தரவு செய்யாத வரை, அவை நம்மை சீண்டுவது இல்லை. என் வீட்டில் இப்போது பாம்பு வளர்க்கிறேன். அந்த பாம்பின் விஷத்தை ஆராய்ச்சிக்காக சேகரிக்கிறேன். பாம்பு தனது இயற்கை நடவடிக்கையை வெளிப்படுத்தும் வகையில் வீட்டில் ஏற்பாடு செய்து உள்ளேன். பாம்புடன் ஒவ்வொரு நாளும் எனது பயணத்தை தொடர்வது பொறுமையை அதிகரித்து உள்ளது. பாம்பு பொதுவாக நீண்ட நேரம் ஒளிந்து கொள்ளும். பல மாதம் உணவின்றி இருக்கும். அதன் நடத்தையை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட பொறுமை தேவை. ஆரம்பத்தில் வீட்டில் பாம்பு வளர்க்க என் பெற்றோர் பயந்தனர். பின், என் ஆர்வத்தை அவர்கள் புரிந்து கொண்டனர். தற்போது அவர்களும் பாம்பை நேசிப்பதுடன், ராபர்ட் என் செல்லமாக பெயரிட்டு அழைக்கின்றனர். பாம்புகளை பாதுகாக்க வேண்டும் என்பது எனது விருப்பம். தயவு செய்து பாம்பை அடித்து கொல்லாதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை