பிரேத பரிசோதனை கூடத்தில் வேலை செய்யும் ராஜம்மா
- நமது நிருபர் - விபத்து, தற்கொலை, கொலை, மர்மமான முறையில் இறப்போர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகே குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. பல உடல்கள் இருக்கும் பிரேத பரிசோதனை கூடத்தில், பயப்படாமல் வேலை செய்வதே சவாலான விஷயம் தான். ஆனால் மைசூரை சேர்ந்த ராஜம்மா, 40, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பிரேத பரிசோதனை கூடத்தில் வேலை செய்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது சொந்த ஊர் மைசூரு சரகூர். கடந்த 2006ம் ஆண்டு நஞ்சன்கூடு தாலுகா ஹுல்லஹள்ளியில் உள்ள அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்தேன். ஒரு நாள் பிரேத பரிசோதனை அறையில் பணியாற்றும் ஊழியர் வராததால், டாக்டர்களுக்கு உதவ என்னை அங்கு அனுப்பினர். 40 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதே பார்த்ததும் நான் மயக்கம் போட்டு விழுந்தேன். சில நாட்கள் எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பின், அந்த பக்கமே செல்ல கூடாது என்று முடிவு எடுத்தேன். ரவிகுமார் என்ற டாக்டர் எனக்கு தைரியம் அளித்தார். பிரேத பரிசோதனை கூடத்தில் உதவியாளராக பணியாற்றுவது எப்படி என்று கற்று கொடுத்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக நானும் அந்த பணியை கற்று கொள்ள ஆரம்பித்தேன். தற்போது சரகூரு, எச்.டி.கோட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறேன். தேவைப்பட்டால் குண்டலுபேட், நஞ்சன்கூடு அரசு மருத்துவமனைகளுக்கும் சென்று உதவி செய்கிறேன். குடும்ப சூழ்நிலைக்காக தான் இந்த பணியை செய்தேன். டாக்டர்கள், போலீசாரின் ஆதரவான பேச்சு ஊக்கம் அளிக்கிறது. நான் மது அருந்திவிட்டு, பிரேத பரிசோதனை கூடத்தில் பணிபுரிவதாக சிலர் தேவையற்ற வதந்தி பரப்புகின்றனர். இது மனதிற்கு வலியை ஏற்படுத்துகிறது. ஆனால் மற்றவர்கள் பேசுவதை நினைத்து வருத்தப்பட்டால் குடும்பத்தை காப்பாற்ற முடியாது. தற்போது வரை ஒப்பந்த அடிப்படையில் தான் பணியாற்றுகிறேன். எனது வேலையை அரசு நிரந்தரம் செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.