உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் /  கர்நாடக நாடக அகாடமி விருதுக்கு தேர்வான சாவித்ரம்மா

 கர்நாடக நாடக அகாடமி விருதுக்கு தேர்வான சாவித்ரம்மா

- நமது நிருபர் - ஹாவேரி மாவட்டம், ஹனகல் தாலுகா ஷடகுப்பி கிராமத்தை சேர்ந்தவர் சாவித்ரம்மா, 70. தற்போது தாவணகெரேயில் வசிக்கிறார். நாடக கலைஞரான இவர், 45 ஆண்டுகளாக நாடக துறையில் பணியாற்றுகிறார். இவரது சாதனையை அங்கீகரிக்கும் வகையில், 2026 - 2027ம் ஆண்டிற்கான, 'கர்நாடக நாடக அகாடமி' விருதை அரசு அறிவித்துள்ளது. விருதுக்கு தேர்வானது குறித்து, சாவித்ரம்மா கூறியதாவது: நான் சிறு வயதில் இருந்தே நாடக கலைஞர் இல்லை. மூத்த நாடக கலைஞர் நீல்குந்த் பசவனகவுட்டை திருமணம் செய்த பிறகு தான் நாடகத்தில் நடிக்க வந்தேன். அதுவும், அப்போது நிலவிய குடும்ப வறுமையை போக்குவதற்கு தான். அந்த காலக்ககட்டத்தில் எங்களால் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியவில்லை. கடந்த, 1970ல் முதன் முதலாக நாடகத்தில் நடித்தேன். மந்தாகினி பாத்திரத்தை ஏற்று நடித்த எனக்கு பாராட்டு கிடைத்தது. அன்று முதல் நாடக துறையை தேர்ந்து எடுத்தேன். பல சங்கங்கள், அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சிகளில் எங்கள் குழுவின் நாடகத்தை அரங்கேற்றி உள்ளோம். நான் நடித்த, 'அச்சரா தாங்கி அச்சரா' என்ற நாடகம், 300 நாட்களை தாண்டி ஓடி, விருது வென்றது. அப்போதைய முதல்வர் வீரப்பமொய்லி மற்றும் டாக்டர் ராஜ்குமாரிடம் இருந்து, அந்த விருதை வாங்கியது மறக்க முடியாத நினைவு. கடந்த, 2015ம் ஆண்டு கன்னட ராஜ்யோத்சவா, 2017ல் தாவணகெரே மாநகராட்சியின் ராஜ்யோத்சவா விருது கிடைத்தது. ஆனாலும், கர்நாடக நாடக அகாடமி விருது கிடைக்கவில்லையே என்ற வருத்தம் எனக்குள் இருந்தது. தற்போது அந்த விருதும் கிடைத்துவிட்டது. அந்த விருதை, எனக்கு கிடைக்க உதவிய ரசிகர்கள், குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். சாவித்ரம்மா கணவர் நீல்குந்த் பசவனகவுட் கூறுகையில், ''என் மனைவி நாடகங்களில் நடிக்கும் போது, நான் ஹார்மோனியம் வாசிப்பேன். சில நாடகங்களை நான் இயக்கியும் உள்ளேன். கதாபாத்திரத்திற்கு எப்படி உயிர் கொடுக்க வேண்டும் என்றும் அவரிடம் கூறுவேன். ''நாங்கள் இருவரும் பல நாட்கள் உணவின்றி கஷ்டப்பட்டது இன்னும் நினைவில் உள்ளது. எனது மனைவியின் திறமையை அங்கீகரித்து அவருக்கு, கர்நாடக நாடக அகாடமி விருதை அரசு அறிவித்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை