இந்தியன் ரேசிங்கில் கன்னட நடிகரின் அணி
- நமது நிருபர் - தமிழ் நடிகர் அஜித் குமார் போல, கன்னட திரையுலகில் நடிகர் சுதீப்பும், மோட்டார் ஸ்போர்ட்சில் ஆர்வம் உள்ளவர். கோவாவில் நாளை, நாளை மறுநாள் நடக்கும், 'இந்தியன் ரேசிங் திருவிழா'வில் அவரின், 'கிச்சாஸ் கிங்ஸ் பெங்களூரு' அணியும் பங்கேற்கிறது. நம்நாட்டு இளைஞர்களுக்கு விளையாட்டு என்றாலே, கிரிக்கெட், கபடி, ஹாக்கி போன்றவை தான் ஞாபகத்துக்கு வரும். அதையும் தாண்டி, 'மோட்டார் ஸ்போர்ட்ஸ்' என்ற விளையாட்டு இருப்பதை அறிந்தாலும், அதில் அவர்களுக்கு ஆர் வம் இருப்பதில்லை. தற்போ து மோட்டார் ஸ்போர்ட்சில் இந்தியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிறுவர்கள், வாலிபர்கள் வரை, சர்வதேச அளவில் நடைபெறும் பைக், கார் பந்தயங் களில் சாதித்து வருகின்றனர். ரேசிங்கில் ஆர்வம் திரையுலகினர் என்றால், தாங்கள் நடிக்கும் படங்கள் மூலம் சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்வர். அந்த பணத்தில் மால்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் கட்டி, சில நேரம் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தமிழ் திரையுலகில் நடிகர் அஜித் குமார், இளம் தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மோட்டார் ஸ்போர்ட் சில் கவனம் செலுத்துகிறார். உலகளவில், 2024ல் 'அஜித் குமார் ரேசிங்' என்ற அணியை அவர் உருவாக்கினார். இதன் மூலம் சர்வதேச அளவில் நடக்கும் கார்பந்தயங்களில் பங்கேற்றுள்ளார். பல பதக்கங்களையும் அவரின் அணி பெற்றுள்ளது. இது, இளைஞர்களிடம் மோட்டார் ஸ்போர்ட்சில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. சுதீப் அணி தமிழில் நடிகர் அஜித் போல, கன்னட திரையுலகில் நடிகர், 'கிச்சா' சுதீப்பும், மோட்டார் ஸ்போர்ட்சில் களம் இறங்கி உள்ளார். கடந்தாண்டு 'கிச்சாஸ் கிங்ஸ் பெங்களூரு' என்ற அணியை உருவாக்கினார். கோவாவில் வரும், 14, 15ம் தேதிகளில் நடக்கும், 'இந்தியன் ரேசிங் திருவிழா'வில் இவரின் அணியும் பங்கேற்கிறது. இதுகுறித்து நடிகரும், அணி உரிமையாளருமான சுதீப் கூறியதாவது: நிரந்தரமான ஓடுபாதை என்றால், வாகனத்தை கட்டுப்படுத்தி ஓட்டலாம். ஆனால், 'ஸ்டிரீட் ரேஸ்' என்றால், நம் மன நிலையை முற்றிலுமாக மாற்றி விடும். அத்தகைய போட்டி தான், கோவாவில் நாளை, நாளை மறுநாள் நடக்கிறது. ரேஸ் அல்ல... இங்கு நடப்பது ரேஸ் அல்ல; மனதைரியத்தை அளிக்கும் சோதனை. இந்தப் போட்டி, மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தும். இது மிகவும் தீவிரமான போட்டி. சிறிய தவறுக்கு கூட இடமில்லை. மக்களின் சக்தி தான் அணியை விழிப்புடனும், கூர்மையுடனும் வைத்திருக்கும். அந்த சக்தி அனைவரையும், அனைத்து நேரங்களிலும் விழிப்புடன் வைத்திருக்கும். கோவாவில் நடக்கும் போட்டி, பெங்களூரு அணிக்கு புதிய சவாலாகும். எங்கள் அணி ஓட்டுநர்களின் உள்ளுணர்வு, அனுபவம், ஒழுக்கத்தை நம்புகிறோம். வேகத்தை விட துல்லியமும், கட்டுப்பாடும் முக்கியம். இப்போட்டியில், 2025 ஏப் 4 இந்திய சாம்பியனான, பிரெஞ்சு பந்தய வீரர் சாச்செல் ரோடஜ் சிறந்த வீரராவார். இளம் ஐரோப்பிய பந்தய வீரர், இந்தியாவை தனது சோதனை மைதானமாக தேர்ந்தெடுப்பது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அணியில், 'ரேசிங் லீக்' வரலாற்றில் இளம் பந்தய வெற்றியாளரான ருஹான் ஆல்வா. பெங்களூருக்கும், இந்தியாவுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். வருங்காலத்தில் பெங்களூரு மக்கள், அவரது பயணத்தை பற்றி பெருமைபடுவர். அதுபோன்று, மத்திய கிழக்கு முழுதும், கார்டிங்கில் துணை உலக சாம்பியன் கைல் குமரன் உள்ளார். தீவிரமான சர்வதேச போட்டிகள் மூலம், தன் பந்தய திறன்களை மெருகேற்றி உள்ளார். கைலின் உலகத்தரம் வாய்ந்த அனுபவம், முதிர்ச்சியையும், அமைதியையும் தருகிறது. இவை தெரு பந்தயத்திற்கு அவசியமான குணங்களாகும். பெண் பிரிட்டீஷ் பந்தய வீராங்கனையான ஜெம் ஹெப்வொர்த் உள்ளார். இவர், உலகின் சில கடினமான போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர். இவரின் அனுபவம், அணிக்கு தன்னம்பிக்கையை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.