மேலும் செய்திகள்
ஓட்டப்பந்தயத்தில் கலக்கும் தலைமை ஆசிரியை
03-Jul-2026
- நமது நிருபர் - இந்திய தடகள அரங்கில் புதிய திறமையாளர்கள், தற்போது தங்களை திறமையை வெளிப்படுத்தி ஜொலித்து வருகின்றனர். இவர்களில் ஒருவராக ஷிவமொக்காவின் பத்ராவதியை சேர்ந்த சிந்துஸ்ரீ, 22, உள்ளார். தடகள விளையாட்டின் ஒரு அங்கமான, 'போல்வால்ட்' எனும் கம்பு ஊன்றி உயரம் தாண்டும் போட்டியில் அசத்துகிறார். திருப்புமுனை இதுகுறித்து சிந்துஸ்ரீ கூறியதாவது: நான் குழந்தையாக இருந்த போது அடி மேல் அடி எடுத்து நடக்க ஆரம்பித்த போதே, என்னை தடகள வீராங்கனை ஆக்க வேண்டும் என்று எனது தந்தை கணேஷ் விரும்பினார். சிறு வயதிலேயே என்னை மைதானத்திற்கு அழைத்து சென்று ஓட வைத்தார். கம்பு ஊன்றி, உயரம் தாண்டும் போட்டியில் தந்தைக்கு ஆர்வம் இருந்தது. ஆனால், அவர் விளையாட்டு வீரரோ, உயரம் தாண்டியவரோ இல்லை. அவருக்கு தெரிந்ததை எனக்கு சொல்லி கொடுத்தார். ஓட்டப்பந்தய போட்டியிலும் ஈடுபட வைத்தார். பள்ளியில் படித்த போது, ஷிவமொக்காவில் நடந்த, 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் பதக்கம் வென்றது தான் எனது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. ரூ.1.15 லட்சம் பயிற்சியாளர் டேவிட் என்பவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கொடுத்த பயிற்சியால், 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகளில் நிறைய பதக்கம் கிடைத்தது. கடந்த, 2016ம் ஆண்டு பெங்களூரின், 'சாய்' எனும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் சேர வாய்ப்பு கிடைத்தது. பயிற்சியாளர் சதீஷ், கம்பு ஊன்றி உயரம் தாண்டும் விளையாட்டுக்கு என்னை மாற்றினார். நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று ஏற்று கொண்டேன். தொடர்ந்து பயிற்சி எடுத்தேன். கடந்த, 2021ல் 'டெகாத்லான்' நிபுணர் விஜித், பயிற்சி மையத்திற்கு வந்து, கம்பு ஊன்றி உயரம் தாண்ட கூடுதல் பயிற்சி அளித்தார். இந்திய விளையாட்டு ஆணையம் தான் எனக்கு உயரம் தாண்டும் கம்பு வாங்கி கொடுத்தது. இரண்டு கம்புகள் கொடுத்தனர். ஒரு கம்பின் விலை, 1.15 லட்சம் ரூபாய். இந்த விளையாட்டு தான் நமது வாழ்க்கை. இதில் ஜொலிக்க வேண்டும் என்று நினைத்தேன். எனது இலக்கு கடந்த, 2023ம் ஆண்டு எனக்கு கடினமாக அமைந்தது. மாரைடைப்பால் எனது தந்தை இறந்தார். பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. இன்னும் நிறைய கஷ்டங்கள் வந்து சேர்ந்தது. ஆனாலும் மனம் தளரவில்லை. தந்தையின் கனவை நிறைவேற்றும் பாதையில் பயணம் செய்கிறேன். தந்தை இறந்த பின், தாத்தா கிருஷ்ணப்பா தான் எங்களை கவனித்து கொள்கிறார். தையல்காரராக உள்ளார். இப்போது நான் பி.காம்., முடித்து விட்டேன். அரசு எனக்கு ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும். ஆசிய விளையா ட்டு போட்டிகளில் இந்தியாவுக்காக பங்கேற்று தங்கம் வெல்ல வேண்டும் என்பது எனது இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.
03-Jul-2026