சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ராஜிவ் மைசூரில் மரங்களை நடுகிறார்!
- நமது நிருபர் - சுற்றுச்சூழல் மாசுபடுவது, வெப்ப நிலை அதிகரிப்பதும், மாநிலத்தின் முக்கியமான பிரச்னைகளாகும். மரங்களை வெட்டி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன; வானுயர்ந்த அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதன் விளைவாக, பசுமை மாயமாகியுள்ளது; மழை குறைந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு, சிலர் மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். இவர்களில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜிவும் ஒருவர். மைசூரை சேர்ந்த, ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர், நர்சரி வைத்துள்ளார். மைசூரை பசுமையாக்க வேண்டும் என்பது, இவரது குறிக்கோள். இதற்காக பல இடங்களில் செடிகள் நட்டுள்ளார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட செடிகளை, இலவசமாக வழங்கியுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, இவர் செய்யும் சேவையை மைசூரு மாநகராட்சி ராஜி வுக்கு பாராட்டு சான்றிதழ் அளித்துள்ளது. பல சங்கங்கள், அமைப்புகளும், இவரை பாராட்டி கவுரவித்துள்ளன. வருங்கால சந்ததியினருக்கு, தரமான சுற்றுச்சூழல், மாசற்ற காற்றை தருவது நமது கடமையாகும். இந்த கடமையை சிலர் மட்டுமே செய்கின்றனர். ராஜி வின் தன்னார்வ சேவை, மற்றவருக்கு முன் மாதிரியாக உள்ளது. இது குறித்து, ராஜி வ் கூறியதாவது: இன்றைய நாட்களில் சுற்றுச்சூழல் மாசுபடுவதும், வெப்ப நிலை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதும், கவலை அளிக்கிறது. வறண்டு கிடக்கும் மைசூரை, பசுமையாக்க வேண்டும் என, என் நண்பர்களுடன் சேர்ந்து செடிகள் நட்டு வருகிறேன். விமான நிலையத்துக்கு செல்லும் பாதையில், மிகப்பெரிய நர்சரி வைத்திருக்கிறேன். இங்கு, 10 க்கும் மேற்பட்ட பணியாட்களை நியமித்துள்ளேன். அவர்கள் செடிகளை தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளாக, 23 விதமான செடிகளை வளர்த்து, மைசூரு நகர் மற்றும் வெளி வட்ட சாலைகளில் நட்டு வருகிறேன். மைசூரு பசுமையாக மாற வேண்டும். சங்கங்கள், அமைப்புகள், மடங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மைசூரு மாநகராட்சி ஊழியர்கள், பொது மக்கள் என, பலரும் என்னிடம் இலவசமாக செடிகள் வாங்கி சென்று வளர்க்கின்றனர். செடிகளை நட்டு பராமரிக்க, என் நண்பர்களின் ஒத்துழைப்புடன் ஆண்டு தோறும், 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவிடுகிறேன். செடிகளை வளர்க்க விரும்புவோர், என்னிடம் இலவசமாக வாங்கலாம். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் நோக்கில், உலகில் பல்வேறு பணிகள் நடக்கின்றன. கலாசார நகர் என்ற பெயர் பெற்றுள்ள மைசூரின் சுற்றுச்சூழலை பாதுகாக்க, என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என, நான் விரும்பினேன். அதன்படி, நர்சரி அமைத்து, செடிகளை வளர்க்கிறேன். மைசூரு நகரில் ஆங்காங்கே நடுகிறேன். முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சித்தராமையா உட்பட, பலரும் எங்கள் நர்சரிக்கு வந்து, செடிகள் நட்டு மக்களை ஊக்கப் படுத்தியுள்ளனர். எங்கள் நர்சரியில் பூச்செடிகள், பழ மரங்கள், காய்கறிகள், வேப்பம், புங்கை, ஆலமரம், அலங்கார செடிகள், மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளும் உள்ளன. நாம் இறந்த பின், உடல் மண்ணுக்குள் அடக்கமாகிறது. நம்மை சுமக்கும் பூமித்தாய்க்கு நம்மால் முடிந்த சேவையை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.