மேலும் செய்திகள்
விவசாயத்தில் வித்தை காட்டும் சங்கீதா
22-Dec-2025
- நமது நிருபர் -: ஹூப்பள்ளி மாவட்டம், தார்வாட் தாலுகாவை சேர்ந்தவர் ராஜுரா, 59. ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவருக்கு சிறுவயதில் இருந்தே விவசாயத்தின் மீதான ஆர்வம் அதிகம். ஆனால், பணிச்சூழல், குடும்ப சூழல் காரணமாக விவசாய செய்ய போதிய நேரம் கிடைக்கவில்லை. இருப்பினும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய நிலத்திற்கு சென்று, அங்கு சின்ன சின்ன வேலைகளை செய்வார். இது, அவருக்கு ஒரு பொழுதுபோக்காக அமைந்தது. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். பின், தனக்கு சொந்தமான 4 ஏக்கர் தோட்டத்தில், 10,000 ரோஜா செடிகள் நட்டார். ரோஜா விவசாயத்தில் ராஜாவாக வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டார். பலரும் ஓய்வு காலத்தில் ஓய்வு எடுக்க நினைக்கும் போது, ராஜுரா மட்டும் ஓய்விலும் ஊதியம் பார்க்க ஆசைப்பட்டார். அதற்கான முயற்சிகளை செம்மையாக செய்தும் வருகிறார். 400 கிராம் கொய்யா பின், தன் தோட்டத்தில் ஜப்பானிய வகை கொய்யாக் கன்றுகளை நட்டார். இந்த கன்றுகள் மரமாகும் போது, அதில் விளையும் கொய்யாவானது, வழக்கமான கொய்யா பழத்தை விட பெரிய அளவில் காட்சி அளிக்கும். இதற்கு மார்க்கெட்டில் மவுசும் அதிகம். ஒரு கொய்யாப்பழம் மட்டுமே, 300 முதல் 400 கிராம் எடை இருக்கும். மாணவர்கள் வருகை நட்ட கொய்யா கன்றுகள் மரமாகி ஏற்கனவே, ஒரு முறை அறுவடை செய்து விட்டார். 1,500 கிலோ கொய்யாப்பழங்கள் கிடைத்தன. இதன் மூலம் லட்சங்களில் லாபம் பார்த்தார். இதை பார்த்த மற்ற விவசாயிகள், ராஜுரா தோட்டத்துக்கு நேரில் வந்து, ஜப்பானிய வகை கொய்யா குறித்து கேட்டறிந்து சென்றனர். வேளாண் கல்லுாரி மாணவர்களும் தோட்டத்துக்கு வந்து கேட்டு அறிந்தனர். இதைப்பார்த்த ஆனந்தத்தில், மீண்டும் தன் தோட்டத்தில் மீதமுள்ள பகுதியிலும், ஜப்பானிய வகை கொய்யா கன்றுகளை ராஜுரா நட்டுள்ளார். அமோக விற்பனை இவற்றில் வரும் பிப்ரவரி, மார்ச்சில் கொய்யா காய்க்குமாம். அப்போது, 10 ஆயிரம் கிலோ வரை கொய்யா கிடைக்கும் என்கிறார். இவ்வகை கொய்யாப்பழம் மும்பை, புதுடில்லியில் கிலோவுக்கு 250 முதல் 300 ரூபாய் வரை விற்பனையாகிறது. உள்ளூர் சந்தையில் கிலோவுக்கு 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து, ராஜுரா கூறியதாவது: நான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். விவசாயம் தொடர்பாக நிறைய விஷயங்களை படித்து தெரிந்து கொள்வேன். வேலையில் இருந்து ஓய்வு பெற்றவுடன், பாரம்பரிய பயிர்களில் ஆர்வம் செலுத்துவதற்கு பதிலாக, அரிய வகை பயிர்களில் விவசாயம் செய்ய முனைப்பு காட்டினேன். இதன் விளைவாக ஜப்பானிய வகை கொய்யாக்களை விளைவித்தேன். கொய்யா மிகவும் சுவையான, சத்தான பழமாகும். இதில், நீர் சத்து அதிகம் உள்ளது. இந்த செடிகளை குஜராத்தில் இருந்து வரவழைத்தேன். நான் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைத்தது. லட்சங்களில் வருமானம் கிடைத்து உள்ளது. வரும் காலத்தில் மேலும் பல பயிர்களை நட உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
22-Dec-2025