பேஷன் ஷோவுக்காக பட்டாம்பூச்சிகளை சிறைபிடித்ததால் சர்ச்சை..!
பாரீஸ் பேஷன் வீக்கில், மாடல்கள் அணிந்து வந்த விளக்கு பொருத்தப்பட்ட முப்பரிமாண கவுனில், பட்டாம்பூச்சிகளை உயிருடன் அடைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகளவில் மிகவும் பிரபலமான பாரீஸ் பேஷன் வீக் , ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும். இந்தாண்டு இளவேனில்/ கோடை சீசனுக்கான பேஷன் வீக், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் செப்.,25ல் துவங்கி அக்.,3ம் தேதி வரை நடக்கிறது. பேஷன் நிகழ்ச்சியில், பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் வடிவமைத்த ஆடைகளை, மாடல்கள் அணிந்து கேட் வாக் செய்வது வழக்கம். 3வது நாளான நேற்று, ஜப்பானை சேர்ந்த ஜுன் தகாஹாஷி என்ற ஆடை வடிவமைப்பாளர், வடிவமைத்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விளக்கு பொருத்தப்பட்ட முப்பரிமாண கவுனை பெண் மாடல்கள் அணிந்து வலம் வந்தனர். அதில் உயிருடன் உள்ள பட்டாம்பூச்சிகள் அடைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.