உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா /  சுற்றுலா பயணியரின் சொர்க்க பூமி மூடிகெரே தேவரமனே மலை

 சுற்றுலா பயணியரின் சொர்க்க பூமி மூடிகெரே தேவரமனே மலை

- நமது நிருபர் - கர்நாடகாவின் பல மாவட்டங்களில் மழை இல்லாமல் வறட்சி நிலவினாலும், மலைநாடு பகுதி என்று அழைக்கப்படும் சிக்கமகளூரு மாவட்டத்தில், தினமும் சாரல் மழை பெய்கிறது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணியர் கூட்டம் அலை மோதுகிறது. இந்த மாவட்டத்தின் பல பகுதிகளில், எங்கு பார்த்தாலும் பச்சை, பசலேன காட்சி அளிக்கிறது. குறிப்பாக, சுற்றுலா பயணியரின் சொர்க்க பூமியாக, மூடிகெரேயில் உள்ள தேவரமனே மலை உருவெடுத்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்த இடம் இயற்கை ஆர்வலர்கள், புகைப்பட கலைஞர்கள், மலையேற்ற பிரியர்களின் சொர்க்கமாக உள்ளது. தேவரமனே மலையின் முக்கிய அழகே, கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, பரந்து விரிந்து காணப்படும், பசுமையான புல்வெளி குன்றுகள் தான். தற்போது அப்பகுதியில் பெய்யும் சாரல் மழையால், மலைகள் மீது மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்கின்றன. அருகில் யார் நிற்கின்றனர் என்று கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக உள்ளது. மலை உச்சிக்கு சென்று, மேற்கு தொடர்ச்சி மலையை அழகை, 360 டிகிரி கோணத்தில் கண்டு ரசிப்பது புதிய அனுபவமாக இருக்கும். அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு வெறும், 15 முதல் 20 நிமிடங்களில் ஏறி சென்று விடலாம். ஆனால் இந்த பாதை சவாலானது. செங்குத்தாக பாதையில் நடந்து செல்ல வேண்டும்.சூரிய உதயம், சூரிய அஸ்தனமனத்தை கண்டு ரசிக்க, வானில் ஏற்படும் வண்ண மாற்றங்கள், பனிமூட்டங்களை புகைப்படம் எடுக்க சிறந்த இடமாக உள்ளது. எப்போதும் குளிர்ந்த காற்று வீசுவதால் குழந்தைகளை அழைத்து செல்லும் போது, ஸ்வெட்டர் மறக்காமல் எடுத்து செல்வது நல்லது. இந்த மலைக்கு அருகே உள்ள காபி தோட்டங்களுக்கு நடுவில் அட்டிகே நீர்வீழ்ச்சியும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !