சுற்றுலா பயணியரை ஈர்க்கும் எலஹங்கா ஏரி
பெங்களூரு பொழுதுபோக்கு மையங்கள் நிறைந்த, அற்புதமான நகரமாகும். பூங்காக்கள், அரண்மனைகள், ஏரிகள், அருங்காட்சியகம், கோவில்கள் உட்பட, பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. வெளிநாட்டினரின் விருப்பமான நகரங்களிலும் பெங்களூரு இடம்பெற்றிருக்கும். நகரில் ஒரு காலத்தில், ஆயிரக்கணக்கான ஏரிகள் இருந்தன. ஆனால் நகரமயமாவதால், பல ஏரிகள் மறைந்து, வானுயர்ந்த அடுக்குமாடி கட்டடங்களாக மாறியுள்ளன. தொலைநோக்கு பார்வையுடன், அன்றைய மன்னர்கள், ஏரிகளை அமைத்து, மக்களுக்கு குடிநீருக்கு வசதி செய்தனர். தப்பி பிழைத்த ஏரிகளில் எலஹங்கா ஏரியும் ஒன்றாகும். விசாலமான இந்த ஏரி, தற்போது சுற்றுலா தலமாக மாறியுள்ளது. எலஹங்கா ஏரி வளாகத்தில், தினமும் காலை, மாலையில் நடைப்பயிற்சி செய்ய ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். மனதுக்கும், உடலுக்கும் இதமளிக்கும் குளிர்ந்த காற்றை சுவாசித்தபடி, இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டு, ஏரியை சுற்றி நடப்பது அற்புதமான அனுபவமாக இருக்கும். இதே காரணத்தால் மூத்த குடிமக்கள், இளைஞர்கள், இளம் பெண்கள், சிறார்கள் நடைப்பயிற்சிக்கு வருகின்றனர். இதற்கு முன்பு குடியிருப்புகள், தொழிற்சாலைகளில் இருந்து, கழிவுநீர் கலந்ததால் ஏரி நீர் அசுத்தம் அடைந்திருந்தது. மழை பெய்யும்போது, துர்நாற்றம் வீசியது. பொது மக்களின் வேண்டுகோளின்படி, பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், எலஹங்கா ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுத்தது. 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில், ஏரி சுற்றுலா தலமாக மாற்றப்பட்டது. ஏரி நீர் சுத்திகரிக்கப்பட்டது. ஏரியின் மத்திய பகுதியில், நீர் வீழ்ச்சி, பறவைகளுக்கு அடைக்கலம் தரும் வகையில் அழகான தீவு, ஏரியை சுற்றிலும் குழந்தைகளின் ரயில், வாக்கிங் டிராக் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன. இங்குள்ள தீவுகளில் ஆயிரக்கணக்கான பறவைகள் வசிப்பதை காணலாம். வெளிநாட்டு பறவைகளும் இங்கு வருகின்றன. நறுமணம் கமழும் பலவிதமான பூச்செடிகள், மரக்கன்றுகள் நடப்பட்டன. இப்போது ஏரியை காணும்போது, மனம் மகிழ்ச்சி அடைகிறது. இதை காண சுற்றுலா பயணியர் குவிகின்றனர். விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணியர் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். ஏரி நிரம்பினால் சுற்றுப்பகுதி மக்கள் சமர்ப்பண பூஜை செய்கின்றனர். எலஹங்கா ஏரியில், படகு சவாரியும் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்தும் மகிழ்கின்றனர்.
எப்படி செல்வது?
பெங்களூரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் எலஹங்காவுக்கு, பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. வாடகை கார், ஆட்டோ வசதியும் உள்ளது. மெஜஸ்டிக்கில் இருந்து 17 கி.மீ.; மல்லேஸ்வரத்தில் இருந்து, 16 கி.மீ.; யஷ்வந்த்பூரில் இருந்து 16 கி.மீ., தொலைவில் எலஹங்கா உள்ளது. ரயில் அல்லது பஸ்சில் வந்திறங்குவோர், இங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகைக்காரில் எலஹங்காவுக்கு செல்லலாம். பார்வை நேரம்: அதிகாலை 5:00 முதல், காலை 9:00 மணி வரை, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை. - நமது நிருபர் -