பந்த் நடத்தி வாங்கிக் கட்டிக்கொண்ட கன்னட அமைப்புகள்!
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் பெங்களூருவில் செவ்வாயன்று பந்த நடத்தின. இதனால் புதனன்று நகரம் ஸ்தம்பித்தது. ஒரு கிலோ மீட்டரை கடக்க 2 மணி நேரம் கூட ஆனது. இதனால் பெங்களூருவாசிகள் கன்னட அமைப்புகளை திட்டித் தீர்க்கின்றனர். காவிரி விவகாரத்தை அரசியல் பிரச்னையாக்கி குளிர்காய்வதை கர்நாடக மற்றும் தமிழக கட்சிகள் வாடிக்கையாக வைத்துள்ளன. காவிரியிலிருந்து உரிய நேரத்தில் குறுவை சாகுபடிக்கு நீர் திறக்காததால் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளின் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வாடி வதங்கின. செப்டம்பரில் சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகலாம் என்றிருந்த நிலையில், கர்நாடகா தண்ணீர் திறக்காமல் அரசியல் செய்து வருகிறது. இதனால் காவிரி கடைமடை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசின் அழுத்தம் காரணமாக காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு 15 நாட்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் பெங்களூருவில் பந்த் அறிவித்தன. பா.ஜ.க., மதசார்பற்ற ஜனதா தளம் போன்ற எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனால் செவ்வாயன்று பெங்களூருவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.