மோடியை தமிழ்ப் பாடகராக்கிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்; விஞ்ஞானம் விபரீதமாகிறதா?
சமீபகாலமாக உலகப் பிரபலங்களின் குரல்களை மிமிக்ரி செய்யும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்ட செயலிகள் பல, உருவாகத் தொடங்கிவிட்டன. அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் துவங்கி பாரதப் பிரதமர் மோடிவரை அவர்களது குரலை அச்சு அசலாக மிமிக்ரி செய்வது, அவர்களைப் போலப் பாடுவது உள்ளிட்ட விஷயங்களை இவை செய்கின்றன. இந்த ஏஐ தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போமா?ஏஐ எனப்படும் ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜன்ஸ் மற்றும் மெஷின் லர்னிங் குறித்து தற்போது பல உலக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர். மென்பொருள் அல்காரிதங்கள் பல வகைப்படும். அவற்றில் முக்கியமானது மெஷின் லர்னிங் அல்காரிதம். இதன்மூலம் ஒரு கணினி, மனிதர்கள் மென்பொருளின் கோடிங்கின்போது உட்புகுத்தும் தகவல்களை சேகரித்து அதனை பிரித்து உணர்ந்து கற்றுக்கொள்ளும். உதாரணமாக பிரதமர் மோடி அரசியல் கூட்டங்களின்போது பொதுவெளியில் பேசும் பல ஆடியோ கிளிப்களை ஒரு மெஷின் லர்னிங் மென்பொருளின் அல்காரிதத்தில் புகுத்திவிட்டால் அந்த அல்காரிதம் மோடியின் வார்த்தை உச்சரிப்புகளை தெளிவாகக் கற்கும். அவரது குரல் ஏற்ற இறக்கங்கள், அவரது குரலில் அதிகம் எழும் அலைவரிசை, ஸ்தாயி, குரலின் வேகம் என அனைத்தும் மென்பொருளால் கணிக்கப்படும்.