ஏலியன்கள் குறித்து ஆய்வு செய்ய தனிக்குழு அமைத்துள்ள நாசா..!
வானில் திடீரென ஏலியனின் பறக்கும் தட்டு பறந்து வந்து நமது பூமியின் நிலப்பரப்பில் தரையிறங்கினால் எப்படி இருக்கும்? சயின்ஸ் பிக்ஷன் படங்கள், காமிக்ஸ் கதைகளில் இதுபோல நாம் பல காட்சிகளைக் கண்டிருப்போம். ஹாலிவுட் செட்களில் இதுபோன்ற காட்சிகள் படமாக்கப்படும். ஆனால் உண்மையில் இதுபோல பறக்கும் தட்டுகள் உள்ளன என்றால் பலரால் நம்பமுடியாது. இதுபோன்ற பறக்கும் தட்டுகளுக்கு 'அன் ஐடண்டிஃபைட் பிளையிங் ஆப்ஜக்ஸ்ட்' (unidentified flying object) எனப் பெயர். சுருக்கமாக யூஎஃப்ஒ (UFO). இந்த யூஎஃப்ஒ குறித்த ஆய்வு நீண்டகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.பிரபல விண்வெளி ஆய்வாளர் ஸ்டீவன் ஹாக்கிங்ஸ், இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டைன் ஆகியோர் வேற்றுகிரவாசிகள் பல்வேறு கிரகங்களில் வாழ்ந்துவரலாம் என்றும் அவர்கள் நம்மைவிட தொழில்நுட்பத்தில் மேம்பட்டவர்களாகவும் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். பலநூறு ஒளி ஆண்டுகளைத் தாண்டிப் பயணிக்கும் விண்வெளி ஓடங்கள் அவர்களிடம் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இது எதற்குமே ஆதாரப்பூர்வமான சாட்சிகள் இல்லை. இந்நிலையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, இதுதொடர்பான தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.