உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறிந்துகொள்வோம் / வீட்டில் வளர்க்க ஏற்றவை செடிகளா... மரங்களா?

வீட்டில் வளர்க்க ஏற்றவை செடிகளா... மரங்களா?

வீட்டைச் சுற்றிலும் உள்ள இடத்திற்கு ஏற்ப சிறிய வகையிலான செடிகள் வளர்ப்பதா அல்லது மரங்களை வளர்ப்பதா என முடிவு செய்து கொள்ளலாம். ஆனால், போதுமான இடம் இருக்கும்பட்சத்தில் செடிகள் வளர்ப்பதை விட மரங்கள் வளர்ப்பது நல்லது. சுவையான பழங்களை தரக்கூடிய மரங்கள், மற்றும் நிழல் தரக்கூடிய மரங்களை வளர்ப்பதன் மூலம் நாம் வசிக்கும் வீட்டை இரண்டு மடங்கு பசுமையாக்கலாம். வேப்ப மரம், அரச மரம், புங்கை மரம் ஆகியவை நிழல் மற்றும் சுத்தமான காற்றை இரவிலும் தரக்கூடியவை. இந்த மூன்றில் கண்டிப்பாக இரண்டு வைக்கவும். இவை வீட்டின் அருகில் வைக்கலாம். அது தவிர போதிய இட வசதி இருப்பின் உங்களுக்கு தேவைப்படும் பூ மற்றும் கனி தரக்கூடிய எந்த மரம் வேண்டுமானாலும் வைக்கலாம். இவை 24மணி நேரமும் ஆக்சிசன் தரும்.

பெரும்பாலான பழமரங்கள் அளவில் சிறியதாகவும் நாம் உண்ணுதற்கு ருசியான மற்றும் சத்தான பழங்களை வழங்குகின்றன. அதுமட்டும் இல்லாமல் பழங்களை உண்ணுவதற்கு பறவைகள்,அணில்கள் மற்றும் பழந்தின்னி வவ்வால்கள் வரும். இயற்கையை ரசிப்பவர்களுக்கு பறவைகளின் சத்தம் மிகுந்த மகிழ்ச்சியை தரும்.

பப்பாளி

எளிமையாக வளர்க்கலாம். காய்த்துக்கொண்டே இருக்கும். மற்ற மரங்களை விட இதனை வேகமாக வளர்த்து விடலாம். பப்பாளியில் சுவையும் சத்துக்களும் அதிகம்.

மாதுளை

சிறுமரம். சத்து,சுவை,நிறம் அனைத்திலுமே அடித்துக்கொள்ள முடியாது. இதன் பூ பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.

சீதா மரம்

சீதாப்பழங்கள் அதிக இனிப்பு சுவை கொண்டவை. குளிர்ச்சியை உண்டாக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டுள்ளதால் பித்தம், வாந்தி, பேதி, தலைசுற்றல் போன்றவற்றை குணப்படுத்த கூடிய அற்புத ஆற்றல் இந்தப் பழத்திற்கு உண்டு.

நெல்லி

அரிநெல்லியோ, மலைநெல்லியோ எது வேண்டுமானாலும் வளர்க்கலாம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுங்கள் என்று மருத்துவர்களே அறிவுரை கூறுகிறார்கள்.

வேம்பு

நம் நாட்டின் தலைசிறந்த மரம். அடர்ந்த நிழல், குளுமையான காற்று, மருத்துவம் என அனைத்திலும் முதலிடம் வேம்பிற்கே. .வீட்டின் முன்புறம் வளர்க்க சிறந்த மரம்.அதேபோல், மலர்களைக் கண்டு மயங்காதவர்கள் யாரும் இல்லை. கண்ணுக்கு குளிர்ச்சியும் மனதிற்கு மகிழ்ச்சியும் தரக்கூடிய பூச்செடிகளை விட பூமரங்கள் மிகுந்த வண்ணமயமாக காட்சியளிக்கும்.

செம்மயில்கொன்றை

உலகின் மிகுந்த அழகான மரங்களில் இதுவும் ஒன்று. மே மாதங்களில் மரமே நெருப்பு போல காட்சியளிக்கும்.

மரமல்லி

இதன் மலர்கள் மணம் ஊரெங்கும் வீசக்கூடியது. உயரமாக வளரக்கூடியது. இடமிருந்தால் வளர்க்கலாம்.

பூவரசு

இதன் இலையும் சரி பூவும் சரி அத்தனை அழகாக இருக்கும். வலிமையான மரம். இதன் இலையில் தான் பிள்ளையார் கொழுக்கட்டை செய்வார்கள்.

வாதுமை மரம்

இந்திய பாதாம் என்று அழைக்கப்படுகிறது. அடர்த்தியான நிழலை மிக வேகமாக வளர்ந்து கொடுக்கக்கூடியது. இதன் காயினை வவ்வால்களும், பறவைகளும் இதன் பழத்தை விரும்பி உண்ணும். காயின் உள்ளே இருக்கும் பருப்பு பாதாம் பருப்பின் சுவையை உடையது.பொதுவாக, வேப்பமரம், முருங்கை மரம், பப்பாளி மரம், கொய்யா மரம் போன்றவை வளர்ப்பது நல்லது. ஆனால், அவற்றின் வேர்கள் வீட்டின் அடிவாரத்தை ஊடுருவாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ