இந்தியாவில் பொது கழிப்பிட வசதி மோசம் : சர்வேயில் தகவல்
இந்தியாவில் உள்ள நகரங்களில் பொது கழிப்பிடங்கள், இன்னமும் மோசமான நிலையில் இருப்பதாக சர்வே முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 341 மாவட்டங்களில் பொது கழிப்பிடங்களில் சுகாதாரம் குறித்து லோக்கள் சர்க்கிள் சார்பில் சர்வே நடத்தப்பட்டது. சுமார் 39 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளது. சர்வேயில் பங்கேற்றவர்களில் 69 சதவீதம் பேர் ஆண்கள் மற்றும் 31 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். சர்வேயில் பங்கேற்றவர்களில், 47 சதவீதம் பேர் முதல் நிலை, 31 சதவீதம் பேர் இரண்டாம் நிலை மற்றும் 22 சதவீதம் பேர் மூன்றாம் மற்றும் நான்காம் நிலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:-நகர்ப்புறங்களில் வசிக்கும் இந்தியர்களில், தங்களது நகரத்தில் உள்ள பொது கழிப்பிடங்கள் மேம்பட்டு இருப்பதாக 42 சதவீதம் பேரும், 52 சதவீதம் பேர் எந்தவொரு முன்னேற்றமும் இல்லையென தெரிவித்துள்ளனர்.சர்வேயில் பங்கேற்றவர்களில் 37 சதவீதம் பேர்,பொது கழிப்பிட வசதி சராசரியாக அல்லது சுமாராக இருப்பதாகவும், 25 சதவீதம் பேர் சராசரிக்கும் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர், மோசமாக இருப்பதாவும், 12 சதவீதம் பேர் பொது கழிப்பிடம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், உள்ளே சென்று பயன்படுத்தாமல் வெளியே வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.