மாணவர்களுக்கு நிகராக திறமையில் அபாரம் | sports | Kovai
கோவை அண்ணா பல்கலைக்கு உட்பட்ட 10வது மண்டல கல்லுாரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கியது; இன்று நிறைவடைகிறது. முதல் நாளில் இந்துஸ்தான் இன்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டிகளை கல்லுாரி முதல்வர் ஜெயா துவக்கி வைத்தார். மாணவியருக்கான மாரத்தான் போட்டியில் ஜே.சி.டி., கல்லுாரியை சேர்ந்த ஹரினி, கபிலா ஆகியோர் முதல் இரு இடங்களையும், இந்துஸ்தான் கல்லுாரியை சேர்ந்த ஹேமா வர்சா மூன்றாம் இடமும் பிடித்தனர். 20 மீட்டர் ரேஷ் வாக்கிங் போட்டியில் இந்துஸ்தான் கல்லுாரியை சேர்ந்த முகிலா முதலிடம் பெற்றார். பி.ஏ., இன்ஜினீயரிங் கல்லுாரி காளீஸ்வரி, இந்துஸ்தான் கல்லுாரி இந்து, முறையே இரண்டு, மூன்றாம் இடங்களை பிடித்தனர். ஈட்டி எறிதலில் கற்பகம் கல்லுாரி ராஜவேணி, ஜே.சி.டி., கல்லுாரி வைஸ்ணவி, ஈஸ்வர் கல்லுாரி தர்சினி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். ஹேமர் த்ரோ போட்டியில் இந்துஸ்தான் கல்லுாரி ஜனபிரியா, ஈஸ்வர் கல்லுாரி தர்சினி, பி.ஏ., கல்லுாரி லோகிதா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மாணவர்களுக்கான மாரத்தானில் ஜே.சி.டி., கல்லுாரி பாலமுரளி, தமிழ் செல்வன் மற்றும் இந்துஸ்தான் கல்லுாரி யோகேஸ்ராம் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். ரேஷ் வாக்கிங் போட்டியில் இந்துஸ்தான் கல்லுாரி தானேஷ், சதீஸ்குமார் ஆகியோர் முதல் இரு இடங்களையும், பி.ஏ., கல்லுாரி சஞ்சய் மூன்றாம் இடமும் பிடித்தனர். ஈட்டி எறிதலில் கிருஷ்ணா இன்ஜினீயரிங் கல்லுாரி மகாமணி, சி.எம்.எஸ்., கல்லுாரி திருப்பதி ராஜ், கற்பகம் இன்ஜினீயரிங் மிதுன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். ஹேமர் த்ரோ போட்டியில், இந்துஸ்தான் கல்லுாரி மோகன் ராம் முதலிடம், நேரு இன்ஜினீயரிங் கல்லுாரி சுதீஷ்குமார், மகாலிங்கம் கல்லுாரி சஞ்சை சரவணன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இதில் மாரத்தான், ரேஷ் வாக்கிங் போட்டிகளில் வினாடி கணக்கில் வேகமாக கடந்து, மாணவர்களுக்கு நிகரான திறமையை மாணவியர் வெளிப்படுத்தினர்.