ஆசியாவிலேயே மிக செங்குத்தான மீட்டர் கேஜ் ரயில் பாதை | 116th birthday of ooty train
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் தினமும் காலை 7.15 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1899 ஜூன் 15 முதல் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் இயக்கப்பட்டது. 1908 அக்டோபர் 15 முதல் ஊட்டி ரயில்வே ஸ்டேஷன் வரை ரயில் சேவை நீட்டித்து முதன் முறையாக இயக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி நீலகிரி மலை ரயில் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி ரயில்வே ஸ்டேஷன் வரை ரயில் பாதையில் 16 குகைகள், 216 வளைவுகள் மற்றும் 250 பாலங்கள் உள்ளன. ஆசியாவிலேயே மிக செங்குத்தான மீட்டர் கேஜ் ரயில் பாதைகளில் மிகவும் நீளமானது என்பது ஊட்டி மலை ரயிலின் சிறப்பம்சமாகும். நீலகிரி மலை ரயிலை யுனஸ்கோ நிறுவனம் 2005 ஜூலை 15ல் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. இதையடுத்து இன்று 116வது ஆண்டு தினத்தை முன்னிட்டு 150 பயணிகளுடன் இன்று காலை ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.