தூய்மை பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? | Actor Vijay | TVK | Condemned | Sanitary workers arrested
தங்கள் உரிமைகளுக்காக அறவழியில் போராடிய தூய்மை பணியாளர்களை அராஜக போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாக கைது செய்த பாசிச திமுக அரசுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குண்டுக் கட்டாக இழுத்து சென்று கைது செய்தபோது பெண் தூய்மை பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு, சிலர் படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. மனசாட்சி உள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு நள்ளிரவில் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெரிகிறது. காயம் அடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சையை உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலனை காக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். கைதான தூய்மைப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினரோடு கூட தொடர்புகொள்ள முடியாமல் எந்த உதவியும் கிடைக்காத வகையில் வெவ்வேறு இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தினரோடு கூட தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்க, அவர்கள் என்ன தேச விரோதிகளா? ஆளும் அரசுக்கு மனசாட்சி சிறிதளவேனும் இருக்கிறதா? இந்த கொடூர நடவடிக்கையை பார்த்தால் தமிழகத்தில் நடப்பது மக்களாட்சி அல்ல, கொடுங்கோல் ஆட்சிதான் என்பது தெள்ள தெளிவாகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்ற சொல்லி தூய்மைப் பணியாளர்கள் போராடுகின்றனர். அதை ஏன் இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்றால், ஏன் வாக்குறுதிகளை கொடுக்கிறீர்கள்? அராஜக போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.