போலீஸ் மீதான சந்தேகம்: முதல்வர் பதில் என்ன? | Annaamalai | Ex state president
ென்னையில், சந்தேகத்திற்கிடமான முறையில் உடல் கண்டெடுக்கப்பட்ட திருமலா பால் நிறுவன கருவூல மேலாளர் நவீன் குறித்து, தமிழக போலீஸ் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதுகுறித்து பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். நவீன் உடல், கைகள் பின்பக்கம் கட்டப்பட்ட நிலையில், நைலான் கயிற்றில் தொங்கவிடப்பட்டு இருந்திருக்கிறது. உடல் கிடைத்த அறையில், எந்த நாற்காலிகளும் இல்லை. முழுக்க முழுக்க சந்தேகமான முறையில் கிடைத்த உடலை வைத்து, தற்கொலை என்ற உறுதியான முடிவுக்கு எப்படி வந்தது திமுக அரசின் காவல்துறை? பணம் கையாடல் செய்ததாக கூறப்படும் புகார் வந்து 2 வாரங்கள் கடந்தும், போலீஸ் விசாரணை செய்யவில்லை; நவீன் அனுப்பியதாக கூறப்படும் இமெயிலில், போலீஸ் குறித்து எந்த குற்றச்சாட்டும் சொல்லவில்லை என காவல்துறை செய்திக் குறிப்பு பெருமையுடன் தெரிவிக்கிறது. 2 வாரங்களாக விசாரணை நடத்தவில்லை என்பதில் காவல்துறைக்கு அசிங்கமில்லையா? சுமார் ₹40 கோடிக்கும் அதிகமான பணம் கையாடல் செய்யப்பட்டதாக கூறப்படும் புகாரில், 2 வாரங்களாக போலீஸ் எந்த விசாரணையும் செய்யாமல் இருந்தது என்பதை நம்ப முடியவில்லை. நவீன் அனுப்பியதாக கூறப்படும் இமெயில் அவரது செல்போனில் இருந்து அனுப்பப்பட்டதா அல்லது அவரது லேப்டாப்பில் இருந்து அனுப்பப்பட்டதா? அதில், திருமலா பால் நிறுவன அதிகாரிகள் சிலர் நவீனை மிரட்டியதாக கூறப்பட்டுள்ளது. போலீசார் முன்பே விசாரித்திருந்தால், நவீன் இதை நேரடியாக அவர்களிடம் சொல்லியிருக்க மாட்டாரா? நவீனை, தனியாக விசாரணை செய்ததாக குற்றம் சாட்டப்படும் கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனர் பாண்டியராஜன், அவசர அவசரமாக விடுப்பில் சென்றது ஏன் என்ற கேள்விக்கு, இன்னும் பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கில் பாண்டியராஜன் தொடர்பு குறித்து, சென்னை மேற்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளிலா, 2 நாளிலா அல்லது ஒரு வாரத்திலா? எத்தனை நாட்களில் இந்த அறிக்கை வெளியிடப்படும் என்பது குறித்து ஏன் எந்த தகவலும் இல்லை? திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீஸாரால் அடித்து கொல்லப்பட்ட துயரதுக்கும் தற்போது நவீன் இறப்புக்கும் பொதுவான சந்தேகம், திமுக அரசின் காவல்துறை மீதுதான். அதற்கு பொறுப்பான முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார்? என்றும் அண்ணாமலை கேட்டுள்ளார்.