நாளையுடன் செம்பை சங்கீத உற்சவம் நிறைவு! Chembai Sangeetha Utsavam | Palakkad | Kerala
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோயில். அங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் ஏகாதசி உற்சவம் நடக்கும். இந்த ஆண்டு உற்சவத்துக்கு கடந்த 6ம் தேதி கொடி ஏற்றப்பட்டது. முதல் நாள் நிகழ்ச்சியை பிரபல இசைக்கலைஞர் டி.வி.கோபால கிருஷ்ணன் துவக்கி வைத்து, கச்சேரி நடத்தினார். தொடர்ந்து சுகுமாரி நரேந்திர மேனனின் கச்சேரி நடந்தது. இரண்டாம் நாளில் நந்தினியின் கச்சேரி நடந்தது. இவருக்கு பாலக்காடு சுவாமிநாதன் வயலின், பாலக்காடு மகேஷ்குமார் மிருதங்கம், ஆலுவா ராஜேஷ் கடம், வெள்ளிநேழி ரமேஷ் முகர்சங் வாசித்தனர். தொடர்ந்து ஆனையடி பிரசாத்தின் கச்சேரி நடந்தது. ஏகாதசி உற்சவ நாளான இன்று காலை 8:30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை நடந்தது. மண்ணூர் ராஜகுமாரன் உண்ணி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை, இளம் கலைஞர்களின் சங்கீத ஆராதனை களைகட்டியது. சங்கீத உற்சவத்தின் நிர்வாகி செம்பை சுரேஷ் மற்றும் செம்பை பாகவதரின் சிஷ்யர்கள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். நாளையுடன் ஏகாதசி உற்சவம் நிறைவடைகிறது.