விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் சோக சம்பவம்! Crackers Factory|Fire Accident|Virudhunagar
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வெம்பக்கோட்டை அருகே உள்ள தாயில்பட்டியில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் என்ற தனியார் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது. இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்துள்ளனர். அப்பொழுது ஒரு அறையில் எதிர்பாராத வகையில் தீவிபத்து ஏற்படவே, பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டுள்ளது. தீ அருகில் இருந்த அறைகளுக்கு பரவியதால், பத்துக்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகின. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு உள்ளே சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் நான்கு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வேறு யாரும் பட்டாசு தொழிற்சாலையின் உள்ளே சிக்கி உள்ளனரா என்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்கள் தேடி வருகின்றனர். வெடி விபத்து தொடர்பாக, ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையின் போர்மேனாக பணி புரிந்து வந்த யோகநாதன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.