உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திட்டம் அறிவித்தால் போதுமா? குமுறும் அரசு கல்லூரி மாணவர்கள் | government arts college | TN Govt

திட்டம் அறிவித்தால் போதுமா? குமுறும் அரசு கல்லூரி மாணவர்கள் | government arts college | TN Govt

தமிழகத்தில் ஆண்டுக்கு, 3.50 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர் கல்வி பெறுகின்றனர். இதனால் தற்போதைய உயர் கல்வி சேர்க்கை, 51.3 சதவீதமாக உள்ளது. இது, தேசிய சராசரியை விட, இரண்டு மடங்கு அதிகம். இதற்கு முக்கிய காரணம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளின் எண்ணிக்கை. தமிழகத்தில் மொத்தம் 175 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. மற்ற மாநிலங்களில், இத்தனை கல்லுாரிகளை துவக்கி, ஏழை மாணவர்கள் உயர் கல்வியில் சேர பல ஆண்டுகள் ஆகலாம். ஆனாலும், அதிக கல்லுாரிகளால் மட்டுமே சாதிக்க முடியாது என்கின்றனர் கல்வியாளர்கள். பற்றாக்குறை கடந்த, 2006 முதல், 2011 வரை, ஆசிரியர் தேர்வாணையமான டி.ஆர்.பி மூலமாக நான்கு கட்டங்களாக, 3,500 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அடுத்த பத்தாண்டுகளில், 957 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போதுள்ள, 175 கல்லுாரிகளில், 5,000க்கும் குறைவான பேராசிரியர்களே பணியாற்றுகின்றனர். அதேநேரம், மாதம் 25,000 ரூபாய் தொகுப்பூதியத்தில், 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்தாண்டு புதிதாக துவங்கப்பட்ட கல்லுாரிகளுக்கு, பேராசிரியர்கள் பணியமர்த்தப்படவில்லை. அருகில் உள்ள கல்லுாரிகளின் நிரந்தர பேராசிரியர்கள் தான், அங்கு பாடம் நடத்த அனுப்பப்படுகின்றனர். இதனால், அவற்றின் நிர்வாகம் சீர்குலையும் வாய்ப்பு உள்ளது. 2021ல், 1,146 கவுரவ விரிவுரையாளர்களை, உதவி பேராசிரியர்களாக பணி நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டு, சட்டசபை தேர்தலால் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்து, 2022ல், 4,000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்புவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நியமனத்துக்கு தேர்வான 1,146 பேரின் சார்பில் வழக்கு தொடரப்பட்டதால், பணி நியமனம் இதுவரை நடக்கவில்லை. கடந்த 2023 - 2024ல், ஐந்து அரசு கல்லுாரிகளில், எம்.பி.ஏ., பாடப்பிரிவு துவக்கப்பட்ட நிலையில், அவற்றுக்கு இதுவரை, ஒரு கவுரவ விரிவுரையாளர் கூட நியமிக்கப்படவில்லை. 110 அரசு கல்லுாரிகளில், நுாலகர் பணியிடம் காலியாக உள்ளதால், புத்தகம் வாசிக்கும் மாணவர்களுக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது. அதேபோல, விளையாட்டில் சாதித்து, வேலைவாய்ப்பை பெற நினைக்கும் வீரர் - வீராங்கனையரின் கனவுக்கு தடையாக, 80க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில், 15 ஆண்டுகளில், கல்லுாரிகளும், மாணவர்களும் இரண்டு மடங்காகி விட்ட நிலையில், பேராசிரியர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. இதனால், கல்வித்தரமும் குறைந்துள்ளது கல்லுாரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மாதம் 1,000 ரூபாய், தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களால் வழங்கப்படுகிறது. அவர்கள், அரசு கல்லுாரியில் சேர்ந்தால், தரமான கல்வி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி, 5,145 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதுடன், மேலும், 5,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிரந்தர பணியாளர்களால் தான், அரசுக் கல்லுாரிகள் வளர்ச்சி பெற்று, உயர் கல்வித் துறை உயரும். அரசுக் கல்லுாரி மாணவர்களின் நலன் காக்க விரைவில் உதவி பேராசிரியர்களை நியமிக்க அரசு முன்வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் மாணவர்கள்.

ஜூலை 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !