தரமற்ற 23 மருந்துகளுக்கு தடை! | Govt Hospital | medicines
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மொத்தமாக கொள்முதல் செய்து மருந்துகளை வினியோகிக்கிறது. இதில் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், அவை தடை செய்யப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெவ்வேறு காலகட்டத்தில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் அரசு மருத்துவமனைக்கு வாங்கப்பட்ட காய்ச்சல் பாதிப்பு, தைராய்டு, இதய பாதிப்பு, கிருமி தொற்று, ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் சில தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அந்த 23 மருந்துகளையும் கொள்முதல் செய்ய இரு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய, கடுமையான தர நிர்ணய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. முதல் கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் பரிசோதிக்கப்படும். தமிழகம் மட்டுமன்றி, நாடு முழுதும் உள்ள முக்கிய ஆய்வகங்களுக்கு அந்த மாதிரிகள் அனுப்பப்படுகின்றன. அதன் தரம் உறுதி செய்யப்பட்ட பிறகே மருத்துவமனைகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன. தரமற்ற மருந்துகளை வினியோகித்தால் முதற்கட்டமாக அந்த மருந்துகள் இரு ஆண்டுகளுக்கு தடை செய்யப்படும். இது தொடர்ந்தால், அந்த மருந்துகளை வினியோகம் செய்த நிறுவனம் கருப்பு பட்டியலில் வைக்கப்படும்.