2025 ஐபிஎல் சீசன் எஞ்சிய போட்டிகள் ஒத்திவைப்பு | India - Pakistan tensions | IPL 2025 suspended | B
18வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 22 முதல் நடந்து வருகிறது. இறுதி போட்டி வரும் 25ம் தேதி நடக்க இருந்தது. இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தால் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகளின் 9 முகாம்களை இந்திய ராணுவம் தகர்த்தது. அதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை மாநிலங்களை குறிவைத்து ஏவுகணை, ட்ரோன்களை வீசுகிறது. அனைத்தையும் நமது ராணுவம் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் தகர்த்து உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நேற்று ஹிமாச்சல் பிரதேசம், தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதிய போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 58 போட்டிகள் முடிந்த நிலையில் மீதமுள்ள போட்டிகளை ஒத்திவைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. வீரர்களுக்கான பாதுகாப்பை கருத்தில் கொண்டும், இந்த சூழலில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது சரியாக இருக்காது என்பதாலும் இந்த முடிவை பிசிசிஐ எடுத்திருப்பதாக தெரிகிறது. ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். அதன் பிறகு நிலைமைக்கு ஏற்ப அரசு மற்றும் அனைத்து தரப்புடனும் கலந்து பேசி முடிவு செய்யப்படும். தற்போதைய பதட்டமான சூழ்நிலையில் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு அளித்த டாட்டா நிறுவனம் மற்றும் அனைத்து ஸ்பான்சர்களுக்கு நன்றி. எஞ்சிய போட்டிகளுக்கான புதிய அட்டவணை, அனைத்து தரப்பையும் கலந்தாலோசித்து வெளியிடப்படும். இந்த பதற்றமான சூழ்நிலையில் மத்திய அரசு, ராணுவத்துடன் பிசிசிஐ துணை நிற்கும் என்றும் ராஜீவ் சுக்லா கூறினார்.