ஜகர்தா முருகன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் Indonesia Murugan Temple Kumbabishekam | Modi Jakarta
இந்தோனேசியாவின் மேற்கு ஜகர்தாவில் சனாதன தர்ம ஆலயம் என்ற பெயரில் பிரமாண்ட முருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோலாகலமாக நடந்த இக்கோயில் கும்பாபிஷேகத்தில், வீடியோ கான்பரன்ஸ் முறையில் பிரதமர் மோடி பங்கேற்றார். முருகனுக்கு அரோகரா சொல்லி உலகம் முழுதும் உள்ள முருக பக்தர்களை மோடி வாழ்த்தினார். அவர் பேசியதாவது: சில தினங்களுக்கு முன்பு தான் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ இந்தியா வந்திருந்தார். 140 கோடி இந்தியர்களின் அன்பை பெற்று சென்றார். இப்போது இந்தோனேசியாவின் ஜகர்தாவில் நடக்கும் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த அதிபர் பிரபோவோ மற்றும் விழா குழுவினருக்கு வாழ்த்துக்கள். இந்தியா-இந்தோனேசியா தொடர்பு வெறும் அரசியல், பூகோள ரீதியானது மட்டுமல்ல. நம் இரு நாடுகள் இடையிலான தொடர்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. முருகன், ராமன், புத்தர் ஆகியோருடன் தொடர்புடையது. இந்தோனேசியாவில் உள்ள கோயிலுக்கு செல்வோர், காசி உள்ளிட்ட புனித தலங்களுக்கு செல்லும் உணர்வை பெறுகின்றனர். அயோத்தியில் இன்றும் இந்தோனேசிய ராமாயண நாடகங்கள் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. இரு நாடுகளின் உறவு கலாசாரம், வரலாறு, நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது.