திருவாரூர் ஆஸ்பிடல் கேன்டீனை மூடி சீல் வைத்த அதிகாரிகள் | Lizard in sambar | Pregnant woman
கர்ப்பிணி சாப்பிட்ட இட்லி சாம்பாரில் கிடந்த பல்லி! திருவாரூர் ஆஸ்பிடலில் பரபரப்பு திருவாரூர் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட வடுகக்குடியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் கவுசல்யா பிரசவத்திற்காக கடந்த 5 நாட்களாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு ஆஸ்பிடல் வளாகத்தில் உள்ள விவிஆர் கேன்டீனில் ஜெயராமன் இன்று காலை 4 இட்லி வாங்கி கொடுத்துள்ளார். கர்ப்பிணியான கவுசல்யா ஒரு இட்லியை சாப்பிட்ட நிலையில், 2வது இட்லிக்கு சாம்பாரை ஊற்றியபோது இறந்துபோன சிறிய பல்லி ஒன்று வந்து விழுந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த கவுசல்யா, தந்தையிடம் சொல்ல, அவர் அந்த இட்லியுடன் கேன்டீன் சென்று கேட்டுள்ளார். அப்போது கேன்டீன் உரிமையாளர் அலட்சியமாக பதில் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது. அங்கு வந்த உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் கேன்டீனில் ஆய்வு செய்தனர். பல்லி விழுந்ததாக சொல்லப்படும் சாம்பாரை அப்புறப்படுத்தி, அதன் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பிய அதிகாரிகள், கேன்டீனை மூடி சீல் வைத்தனர்.