32,500 பேருக்கு சம்பளம் எப்போது? Teachers Salary | TN Government | September
32,500 பேருக்கு சம்பளம் எப்போது? Teachers Salary | TN Government | September தமிழகத்தில் மத்திய - மாநில அரசுகள் இணைந்து, கல்வி வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தை செயல்படுத்துகின்றன. இதற்காக, நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என 15 ஆயிரம் பேரும், ஒப்பந்த அடிப்படையில் 17,500 பேரும் என மொத்தம், 32,500 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், செப்டம்பர் மாதத்துக்கான சம்பளம் நேற்று வரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: இந்தாண்டு இந்த திட்டத்துக்காக, 3,585 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், மத்திய அரசு, 1,434 கோடி ரூபாயையும், மாநில அரசு 2,151 கோடி ரூபாயையும் வழங்க வேண்டும். இதில் மத்திய அரசு முதல் காலாண்டு நிதியாக, 573 கோடி ரூபாயை வழங்க வேண்டும். ஆனால், இதுவரை வழங்கவில்லை. தமிழக அரசு, மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையில் சேராமல் உள்ளதால், இந்த நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை விடுவிக்கும்படி, முதல்வர் ஸ்டாலின், கடந்த 27ம் தேதி, பிரதமரிடம் வலியுறுத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் நிதி கிடைக்காததால்தான், எங்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட அதிகாரிகள் கூறுகின்றனர். ஒன்றிய அரசிடம் இருந்து நிதியை பெற வேண்டியது, தமிழக அரசின் பொறுப்பு. பொதுவாக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மிகக்குறைந்த சம்பளம் வாங்குகின்றனர். அந்த சம்பளம் இன்னும் வழங்கப்படாததால் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். தமிழக அரசு, மத்திய அரசை காரணம் காட்டி எங்களை வஞ்சிக்காமல், மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு, பிற துறைகளுக்கான நிதியிலிருந்து விதிகளுக்கு உட்பட்டு, 25 கோடி ரூபாயை பள்ளிக் கல்வி துறைக்கு மாற்றி, எங்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும், என அவர்கள் வலியுறுத்தினர்.