40 நாட்களுக்கு முன் நடந்த சம்பவம்! ஊரே திரண்ட காட்சி | Crime | Police Investigation | Usilampatti
40 நாட்களுக்கு முன் நடந்த சம்பவம்! ஊரே திரண்ட காட்சி | Crime | Police Investigation | Usilampatti மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் அமுதா வயது 40. கணவரை இழந்த இவர் தனியாக வசித்து வந்தார். சில ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த உறவினரான தவமணியுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சென்ற ஏப்ரல் 18ல் அமுதாவை காணவில்லை என உறவினர்கள் உசிலம்பட்டி டவுன் போலீசில் புகார் அளித்தனர். அமுதா செல்போன் எண்ணை வைத்து விசாரித்ததில் தவமணியுடன் கடைசியாக பேசியிருப்பது தெரிய வந்தது. தவமணியை கைது செய்த தனிப்படை போலீசார் கஸ்டடியில் வைத்து விசாரித்தனர். திருப்பூரில் பணிபுரிந்த நான், அமுதாவையும் அழைத்து சென்று சில நாட்கள் திருப்பூரில் தங்கி இருந்தேன். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி அமுதாவை கொலை செய்தேன். இதை யாருக்கும் தெரியாமல் மறைக்க அவரது உடலை பாரப்பாளையம் அருகே நொய்யல் ஆற்றின் கரையோரம் புதைத்தேன். 40 நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்தது என தவமணி விசாரணையில் கூறி உள்ளார். உசிலம்பட்டி தனிப்படை போலீசார் தவமணியை இன்று திருப்பூர் அழைத்து வந்தனர். தவமணி அடையாளம் காட்டிய இடத்தில் திருப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தேடினர். நொய்யல் ஆற்றின் கரையோரம் பெண்ணின் உடல் புதைக்கப்பட்டதாக தகவல் பரவியதால் அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். ஆனால் அதுபோன்ற எந்த தடயங்களும் கைப்பற்றப்படவில்லை. மழை காரணமாக நொய்யல் ஆற்றில் சில தினங்களாக நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அமுதா உடல் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் பகுதியில் புதைத்து விட்டு தவமணி நாடகம் ஆடுகிறாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.