ஆசிரியருக்காக ஒன்று திரண்டு பஸ்சை மறித்த மாணவர்கள் | Teacher transfer | Students protest
ஆசிரியருக்காக ஒன்று திரண்டு பஸ்சை மறித்த மாணவர்கள் | Teacher transfer | Students protest | Bus captivity | Ranipet | ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் பழைய பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் குமார் பணியில் இருந்துள்ளார். இப்போது அதே ஒன்றியத்திற்குட்பட்ட செங்கல் நத்தம் பள்ளிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சிறப்பாக பாடம் சொல்லி கொடுத்ததுடன், அக்கறையுடன் பழகிய ஆசிரியர் பள்ளிக்கு வராததால் மாணவ மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவரது டிரான்ஸ்பர் பற்றி தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த மாணவ மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு போராட்டத்தில் குதித்தனர். ஆசிரியர் குமாரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது; அவர்தான் மீண்டும் வர வேண்டும் என கோஷம் எழுப்பினர். மாணவர்களுடன் பெற்றோரும் ஊர்மக்களும் சேர்ந்து ஆசிரியர் குமார் அதே பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த சோளிங்கர் அரக்கோணம் அரசு பஸ்சை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பாணாவரம் போலீசார் மாணவர்களிடம் சமாதானம் பேசினர். ஆசிரியர் குமாரும் அங்கு வந்து மாணவர்களை சந்தித்தார். தொடர்ந்து இங்கேயே இருக்க அதிகாரிகளிடம் பேசுவதாக உறுதி அளித்ததையடுத்து அனைவரும் போராடத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.