என்ன ஆனார் பிரதிக் பாண்டே ? சிலிகான் வேலியின் இருண்ட பக்கம் | Pratik Pandey | Silicon Valley
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சிலிகான் வேலியில் உலகில் முன்னணி டெக் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைமையகமும் இங்கு தான் உள்ளது. ஐடி துறையில் பணியாற்றும் பலரது கனவு இந்த சிலிகான் வேலியில் பணியாற்ற வேண்டும் என்பதே. இப்படி பல லட்சம் பேருக்கு கனவு உலகமாக தெரியும் சிலிகான் வேலிக்கும் ஒரு இருண்ட பக்கம் உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவன வளாகத்தில் இந்தியர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரதிக் பாண்டே என்பவர் அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாப்ட்டின் துணை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 19ம் தேதி இரவு அலுவலகம் சென்ற இவர், மறுநாள் அதிகாலை அலுவலக வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இது தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான எந்த தடயங்களும் கிடைக்கவில்லை எனவும் கிரிமினல் செயல்கள் நடைபெற்றதற்கான அறிகுறிகள் இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊழியர் இறந்தது தொடர்பாக கருத்து தெரிவிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் மறுத்துவிட்டது.