உதவியாளர் பணி எனக்கூறி போரில் ஈடுபடுத்திய அவலம் | Russia | Army | Dinamalar
ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022 முதல் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு பல நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. ரஷ்யா ராணுவத்தில் வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை சேர்க்கப்படுகின்றனர். இந்தியர்கள் பலரும் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்துள்ளனர். எக்ட்ரீஷியன், சமையல்காரர்கள், பிளம்பர்கள், டிரைவர்கள் உள்ளிட்ட உதவியாளர்கள் வேலைக்கு ஆட்கள் தேவை எனக்கூறி, சில ஏஜென்ட்கள் இந்தியர்களை ரஷ்ய ராணுவத்தில் மோசடியாக சேர்த்து விட்டுள்ளனர். இவ்வாறு சேர்க்கப்பட்ட இந்தியர்கள் ராணுவத்தில் முன்கள வீரர்களாக ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களை ரஷ்யா விடுவிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி ரந்திர் ஜெய்ஸ்வால் பேட்டி அளித்தார். ரஷ்ய ராணுவத்தில் 126 இந்தியர்கள் பணியாற்றியது தெரியவந்தது. அவர்களில் 96 பேர் கண்டறியப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். 12 பேர் மரணம் அடைந்துள்ளனர். எஞ்சிய 18 பேர் இன்னும் ரஷ்ய ராணுவத்தில் உள்ளனர். அவர்களில் 16 பேர் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களை காணாமல் போனவர்கள் பட்டியலில் ரஷ்யா வைத்துள்ளது என ஜெய்ஸ்வால் கூறினார். ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த கேரளா திருச்சூரை சேர்ந்த 32 வயதான பினில் என்பவர் கொல்லப்பட்டார். அவரது உறவினர் 27 வயதான ஜெயின் படுகாயம் அடைந்து மாஸ்கோ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். பினில் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த ஜெய்ஸ்வால், அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வரும் ஜெயினும் விரைவில் இந்தியா திரும்புவார் என தெரிவித்தார். எஞ்சிய இந்தியர்களை விரைவில் இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பாக ரஷ்ய தூதரகத்துடன் இந்திய அதிகாரிகள் தொடர்பில் உள்ளதாக வெளியுறவு அமைச்சக அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.