25 உயிர்களை பலிவாங்கிய தீ நைட் கிளப் ஓனர்கள் சிக்கினர் Saurabh Luthra |Gaurav Luthra|fire 25 dies
வடக்கு கோவாவின் அர்போரா பகுதியில் இயங்கி வந்த, பிர்ச் பை ரோமியோ லேன் Birch by Romeo Lane nightclub நைட் கிளப்பில் கடந்த 6ம் தேதி நள்ளிரவு, 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கூடியிருந்தனர். மது அருந்தி விட்டு ஜாலியாக டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது, முதல் தளத்தில் வேயப்பட்டிருந்த பனை ஓலை கூரையில் தீப்பிடித்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் ஓட்டம் பிடித்தனர். ஆனால், நைட் கிளப்பின் வாசல் குறுகலாக இருந்ததால், அனைவராலும் ஒரே சமயத்தில் வெளியேற முடியவில்லை. இதனால் பலர் தரைதளத்தில் தஞ்சம் புகுந்தனர். முதல் தளம் தீப்பிடித்து எரிந்து நைட் கிளப் முழுக்க புகை மூட்டம் பரவியது. இதனால் பலர் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். தீயில் சிக்கி 3 பேரும் புகைமூட்டத்தில் மூச்சு திணறி 22 பேரும் இறந்தனர். இறந்தவர்களில் 5 பேர் சுற்றுலா பயணிகள். 20 பேர் நைட் கிளப்பில் வேலை பார்ப்பவர்கள். டான்ஸ் பார்ட்டிக்கு கூடுதல் எஃபெக்ட் கொடுக்கும் வகையில், மின்சார பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது, மின் கசிவு ஏற்பட்டு கூரையில் தீப்பிடித்திருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்தது. சம்பவ இடத்தில் இருந்த டூரிஸ்ட்கள் இதைத்தான் கூறினர். பிறகு, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அதை உறுதிப்படுத்தினார்.