நுார் கான் விமானப்படை தளம் தாக்கப்பட்டது: பாக் பிரதமர் ஒப்புதல்
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பதிலடி தந்த இந்தியா மீது, பாக்., ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இதனால் பதிலடி கொடுக்க துவங்கிய இந்திய படைகள், பாகிஸ்தானிலுள்ள 11 விமானப்படை தளங்களை ஏவுகணைகளை வீசி தகர்த்தது. இந்திய ராணுவத்தின் ஆக்ரோஷ தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான், 10ம்தேதி அமெரிக்காவிடம் கெஞ்சி கூத்தாடியது. இந்திய ராணுவ ஆபரேஷன் டைரக்டர் ஜெனரலை தொடர்பு கொண்டு சண்டை நிறுத்தத்திற்கு கோரிக்கை விடுத்தார். இனியும் பயங்கரவாத தாக்குதலோ, அவர்களுக்கு ஆதரவாக பாக்., ராணுவ தாக்குதலோ தொடர்ந்தால், இந்தியா அதை வேடிக்கை பார்க்காது கடுமையான அடி கொடுக்கும் என்ற எச்சரிக்கையுடன் ராணுவம் தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து, 10ம் தேதி இரவு பாக்., நாட்டு மக்களிடம் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் , சண்டையில் பாகிஸ்தான் வென்று விட்டதாகவும், அதன் காரணமாகவே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்ததாகவும் கூறினார். இரு தரப்பு சண்டை நிறுத்தத்திற்கு உதவிய அமெரிக்கா, சீனா, துருக்கி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சொன்னார். அந்நாட்டின் ராணுவ, விமானப்படை தளங்களை இந்திய ராணுவம் தகர்த்ததை மறைத்த பாகிஸ்தான் பிரதமர், மக்கள் வசிக்கும் இடங்கள் மீது இந்திய ராணுவம் தாக்கியதாக குற்றம்சாட்டினார். ஆனால், பாகிஸ்தானில் இந்திய முப்படைகள் தாக்கிய இடங்கள் பற்றிய விவரங்களை வீடியாே, சாட்டிலைட் படங்களுடன் நமது ராணுவ அதிகாரிகள் வெளியிட்டனர். ஆனாலும், பாகிஸ்தான் அதை தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில், பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதை பாஜ மூத்த தலைவர் அமித் மாளவியா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஷெபாஸ் ஷெரீப் பேசியிருப்பதாவது: 9 - 10ம் தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவில் ராணுவ தளபதி அசீம் முனீர் என்னை தொலைபேசியில் அழைத்தார். இந்திய படைகள் நம் நாட்டில் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக கூறினார். நுார் கான் ஏர்பேஸ் மற்றும் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடந்துள்ளதாக கூறினார் என, ஷெபாஸ் ஷெரீப் பேசியுள்ளார். இதுவரை, இந்திய படைகள் பாகிஸ்தானின் பொதுமக்கள் வசிக்கும் இடங்களையே தாக்கியதாக பாக்., அரசும், ராணுவமும் கூறி வந்தன. அந்நாட்டின் முக்கிய விமானப்படை தளங்களை தாக்கியதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக இந்தியாவின் எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு மற்றும் பஞ்சாபின் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளம் ஆகியவற்றை தகர்த்துவிட்டதாக பாகிஸ்தான் கதை அளந்தது. ஆதம்பூர் சென்று வீரர்களுடன் உரையாற்றியதன் மூலம், பாகிஸ்தான் கூறிய அனைத்தும் பொய் என்பதை பிரதமர் மோடி நிரூபித்தார். இந்நிலையில், இந்திய படைகள் தாக்கியதையும், நள்ளிரவில் ராணுவ தளபதி பதற்றத்துடன் தன்னை போனில் அழைத்ததையும், பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன் வாயாலேயே, ஒப்புக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் வீடியோ பேச்சு, ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் வீரியத்தையும், தாக்கத்தையும் தெளிவாக எடுத்துரைக்கிறது என, மாளவியா கருத்து பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள பொலாரி விமானப்படை தளம் இந்திய படைகளால் தாக்கப்பட்டதையும், அங்கு அந்நாட்டு விமானப்படை வீரர்கள் 6 பேர் கொல்லப்பட்டதாகவும் அம்மாகாண முதல்வர் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்தார். இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளங்களை மட்டுமே இந்தியா குறிவைத்து தாக்கியது, பொதுமக்களை அல்ல என்பதும் தெளிவாகியுள்ளது. இந்திய படைகளின் ஆக்ரோஷ அதிரடி தாக்குதல்களை தாக்குப்பிடிக்க முடியாமலே பிறகே பாக்., ராணுவம் நம் ராணுவத்திடம் சண்டை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.