உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் லஞ்ச வழக்கில் சிக்கிய பின்னணி | Vaithilingam | Ex Minister

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் லஞ்ச வழக்கில் சிக்கிய பின்னணி | Vaithilingam | Ex Minister

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் லஞ்ச வழக்கில் சிக்கிய பின்னணி | Vaithilingam | Ex Minister | ADMK | 28 Crore bribe | முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம், தஞ்சாவூர் ஒரத்தநாடு எம்எல்ஏவாக உள்ளார். இவர், 2011 - 2016 அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் சி.எம்.டி.ஏ அனுமதி வழங்க தனியார் நிறுவனத்திடம் பெரும் தொகை பெற்றதாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தது. அதில், சென்னை பெருங்களத்துாரில் 57.94 ஏக்கர் பரப்பளவில், 1,453 அப்பார்ட்மென்ட் வீடுகள், ஐ.டி நிறுவன கட்டடங்களை கட்ட திட்ட அனுமதி கேட்டு தனியார் நிறுவனம் 2013ல் சிஎம்டிஏவிடம் விண்ணப்பித்தது. இதற்கு, 2 ஆண்டுகளுக்கு மேலாக அனுமதி வழங்காமல் இழுத்தடித்து, 2016ல் திடீரென அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, அப்போது அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்திற்கு 27 கோடியே 90 லட்சம் ரூபாய் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது. அதை வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முகபிரபு இயக்குனர்களாக இருக்கும் முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு கடனாக வழங்கியது போல் கணக்கு காட்டப்பட்டு உள்ளது. லஞ்சமாக பெற்ற பணத்தில் வைத்திலிங்கம், அவரது மகன்கள், திருச்சி பாப்பாக்குறிச்சியில் முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்தின் பெயரில் 23 கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கி உள்ளனர். மேலும் பல இடங்களிலும் லஞ்ச பணத்தில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும் புகாரில் கூறி இருந்தனர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தியதில், லஞ்சம் பெற்றது உறுதியானது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு, லஞ்சம் கொடுத்த தனியார் நிறுவன இயக்குநர் உட்பட 11 பேர் மீது சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் 19ம் தேதி வழக்கு பதிந்தனர். தொடர்ந்து இதே புகாரில், பதவியை தவறாக பயன்படுத்தி கட்டட அனுமதி அளித்ததாக வைத்திலிங்கம், அவரது மகன் பிரபு மீது தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். கட்டுமான பணிக்கு அனுமதி அளித்த எட்டே நாட்களில், வைத்திலிங்கத்தின் மகன்கள் நிறுவனத்துக்கு 27.9 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இவர்களின் நிறுவனம் துவங்கிய 2014 முதல் 2016 வரை வருமான வரி கணக்கில் பூஜ்ஜியமாக இருந்துள்ளது. மேலும் 2014ல், 280 கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்த முடியாமல், திவால் நோட்டீஸ் அனுப்பிய ஒரு நிறுவனம், 28 கோடி ரூபாய் கடன் வழங்கியதாக கூறப்பட்ட தகவலும் தான் அவர்களை சிக்க வைத்துள்ளது. இது போதாதென்று 2011ல் வைத்திலிங்கம் அமைச்சராகும் வரை, அவருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்கள் கணக்கிலும், 36.58 லட்சம் ரூபாய் இருப்பு இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் 2011 முதல் 2016 வரை அமைச்சராக இருந்த காலத்தில் 34.28 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது. அவரது வருமானம் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை