பள்ளி இருக்கு! கட்டடம் இல்லை: மண்டபத்தில் நடக்கும் வகுப்புகள் | School | Sivaganga
சிவகங்கை, சிங்கம்புணரி அடுத்த குன்னத்தூரில் அரசு பள்ளி உள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை 106 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளி கட்டடம் 1998ல் கட்டப்பட்டது. 2015ல் 1.43 லட்சம் ரூபாய் செலவில் மராமத்து பணிகள் செய்யப்பட்டது. ஆனால் மராமத்து பணிகள் சரிவர செய்யப்படவில்லை. 3 ஆண்டுகளுக்கு முன் கட்டடத்தில் தரை, மேல் பூச்சுகளில் வெடிப்பு உண்டானது. இதனால் பள்ளி இழுத்து மூடப்பட்டது. கட்டடம் இடிக்கப்பட்டது. அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டித்தரப்படும் என அதிகாரிகள் கூறினார். உறுதி அளித்து 3 ஆண்டுகள் கடந்த பின்னரும் எந்த நடவடிக்கையும் இல்லை. அங்குள்ள சமுதாய கூடத்தில் 3 வருடமாக மாணவர்கள் படித்து வந்தனர். திருமணம், அரசு நிகழ்ச்சிகள் நடந்தால் சமுதாய கூடத்திலும் இடம் இருக்காது. வேறு வழி இல்லாமல் மாணவர்களை மரத்தடியில் அமர வைத்து வகுப்பு எடுக்கும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டனர். திறந்தவெளியில் பாடம் நடத்துவதால் மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் கவன சிதறல்கள் ஏற்படுகிறது. பெற்றோர்கள் பலமுறை அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.