டாஸ்மாக் வழக்கு ED விசாரணைக்கு இடைக்கால தடை தொடர்கிறது | TASMAC Case | ED investigation
டாஸ்மாக்கில் 1,000 கோடி ஊழல் நடந்ததாக எழுந்த புகார் அடிப்படையில் சென்னை, விழுப்புரம் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் திரைத் துறையைச் சேர்த்தவர்களின் வீடு, அலுவலகங்களிலும் ரெய்டு தொடர்ந்தது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு செய்தது. விசாரித்த கோர்ட் , அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி அறிவுறுத்தியது. தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறை சோதனை மற்றும் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. நேற்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறைக்கு எதிராக தேவையில்லாத கருத்துகளை கோர்ட் கூறுவதாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கூறுகிறார் நாங்கள் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளை தான் விமர்சிக்கிறோம். எந்த ஒரு தனி நபரையோ அல்லது அமைப்பையோ, தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை. வழக்கத்திற்கு மாறான விஷயங்களை செய்யும் போது, அதை நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். யாரையும் குறிப்பிட்டு விமர்சனங்களையும், கருத்துகளையும் கூற வேண்டும் என்பது எங்களின் எண்ணம் அல்ல என நீதிபதிகள் கூறினர். தொடர்ந்து டாஸ்மாக் விவகாரத்தில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என அமலாக்கத் துறை வக்கீல் கேட்டார். அதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை நான்கு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர். அதுவரை அமலாக்கத் துறை சோதனை மற்றும் விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்றும் கூறினர்.