25,000 ஆசிரியர்கள் நீக்கம்: மம்தா சமரச முயற்சி தோல்வி Teachers Protest in West Bengal | SC Sacks
மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 25,700 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற பணியிடங்கள் 2016ல் நிரப்பப்பட்டன. இதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தகுதியில்லாத நபர்கள் லஞ்சம் கொடுத்து ஆசிரியர் ஆனது தெரியவந்தது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்தது. அப்போதைய கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி 2022ல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக சிபிஐ தரப்பில் ஐகோர்ட்டில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், 2016ல் நியமனம் செய்யப்பட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இது மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கொதித்தெழுந்தனர். ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, மாநில அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு, கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்து கடந்த வாரம் தீர்ப்பளித்தது. தகுதியற்ற நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டதும், ஊழல் நடந்ததும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தது. இதையடுத்து, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பணியிழந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் மம்தா ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டின. சுப்ரீம் கோர்ட்டால் பணி நீக்க உத்தரவுக்கு ஆளான ஆசிரியர்களை முதல்வர் மம்தா கொல்கத்தாவில் இன்று சந்தித்து பேசினார். அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். அரசு எப்போதும் உங்கள் பக்கம் உள்ளது. திரிணமுல் அரசுக்கு எதிராக திட்டமிட்ட சதி நடக்கிறது. பணி நியமனம் பெற்ற அனைவரும் தகுதி வாய்ந்தவர்கள். அவர்களில் பலர் கோல்டு மெடல் வென்றவர்கள். இத்தனை ஆண்டுகள் பணியாற்றி, தகுதியுடைய மாணவர்களை உருவாக்கி உள்ளனர். இப்படியிருக்கையில், அப்படிப்பட்ட ஆசிரியர்களை தகுதியற்றவர்கள் என்பதில் நியாயமில்லை. சுப்ரம் கோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என மம்தா பானர்ஜி கூறினார்.