தீபாவளி நெரிசலை தவிர்க்க அரசு ஏற்பாடு! Toll Gate | Diwali Rush | Chennai | Toll fee
தமிழகத்தில் உள்ள 6,600 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகளில், 65 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றை நிர்வகிக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கிறது. பண்டிகை காலங்களில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து செல்லும்போது, சுங்கச்சாவடிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில கி.மீ துாரத்துக்கு வாகனங்கள் வரிசை கட்டி, கட்டணம் செலுத்த பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இம்மாதம் விஜயதசமி விடுமுறை முடிந்து, மக்கள் சென்னை திரும்பியபோது, ஆத்துார், பரனுார் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. அதிகாரிகள் உத்தரவை தொடர்ந்து, சுங்க கட்டணம் செலுத்தாமலே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில், வரும் 31ம் தேதி தீபாவளிக்கு தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை கிடைப்பதால், சென்னை மற்றும் பெரிய நகரங்களில் இருந்து, சொந்த ஊருக்கு அதிகம் பேர் செல்ல உள்ளனர். ஆயிரக்கணக்கில் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டாலும், டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. சிறப்பு ரயில்களிலும் டிக்கெட் முடிந்துவிட்டது. இதனால் கார், வேன்களை மட்டுமே பயன்படுத்தும் கட்டாயம் நேர்ந்துள்ளது. எனவே, 29, 30ம் தேதிகளில், பல லட்சம் மக்கள் வெளியேறும்போது சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கவனத்துக்கு எடுத்து சென்றது.